எவ்வளவு வறட்சி வந்தாலும் ஆவாரை செடி தன்னிச்சையாக செழிப்பாக வளரக்கூடியது. ஆவாரையின் பூ, காய், பட்டை, வேர், இலை ஆகிய ஐந்து உறுப்புகளும் சேர்ந்து ஆவாரைப் பஞ்சாங்கம் என்று அழைக்கப்படுகிறது.
எண்ணற்ற மருத்துவ குணங்கள் கொண்ட ஆவாரம்பூவினை உங்கள் உணவில் சேர்த்துக் கொண்டால் நீங்கள்தான் பாக்கியசாலி.
வறண்ட தரிசு நிலங்களிலும், வயல் வரப்புகளிலும் வளர்ந்து ெபான் மஞ்சள் நிறத்தில் பூத்துக்குலுங்கும் அழகை பார்க்கும்போது கவிதை எழுதத் தெரியாத நபர்களுக்கே கவிதை வந்து கொட்டும்.
பொதுவாக ஒவ்வொரு பொருளும் ஒவ்வொரு நோய்களை குணப்படுத்தும் என கூறுவார்கள்.
ஆனால் இந்த ஆவாரைப் பஞ்சாங்கத்தை தினம் ஒரு டீ ஸ்பூன் அளவு எடுத்து சாப்பிட்டு வந்தால் சர்க்கரை நோய், உடல் சோர்வு, அடங்காத தாகம், தூக்கம் இன்மை, உடல் இளைத்தல் இவை அனைத்திற்கும் உடனடி நிவாரணம் கிடைக்கும்.
* குழந்தையின்மை பிரச்னை உள்ள பெண்கள் கருப்பட்டியுடன் ஆவாரம் பூவை சேர்த்து உண்டுவந்தால், பெண்களுக்கு மலட்டுத்தன்மை நீங்கும். விரைவில் கர்ப்பம் உண்டாகும் வாய்ப்பு ஏற்படும்.
* உடல் சூடு, தோல் வறட்சி நீங்கி பலம் பெற ஆவாரை பூச்சூரணத்தை பாலில் கலந்து குடித்துவர வேண்டும்.
* மாதவிடாயின்போது ஏற்படும் அதிக ரத்தப்போக்குக் கட்டுப்பட 20 கிராம் ஆவாரைப் பட்டையைப் பொடி செய்து அதை தண்ணீரில் போட்டு காலை, மாலை வேளைகளில் குடித்துவர வேண்டும்.
* தோல் அரிப்பு ஏற்பட்டால் ஆவாரம்பூவினை அரைத்து வெந்நீர் கலந்து அதை உடம்பில் தேய்த்து ஊற வைத்து சிறிது நேரம் கழித்துக் குளித்தால் உடனடி நிவாரணம் கிடைக்கும்.
* சிலருக்கு உடலில் கற்றாழை நாற்றம் வீசும். அவர்கள் ஆவாரம்பூவை உணவில் சேர்த்துக்கொண்டால் உடல் வீசும் கற்றாழை நாற்றம் நீங்கும்.
* ஆவாரம்பூ கொழுந்து, ஆவாரம் பட்டை, வேர் இவற்றை சமஅளவு எடுத்து அரைத்து இந்தப் பொடியுடன் பசு நெய் கலந்து சூரணமாகச் செய்து 48 நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டுவர உள்மூலம் குணமாகும்.