நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் பதிவான வாக்குகள் நாளை 268 மையங்களில் எண்ணப்பட உள்ளன.
தமிழகத்தில் உள்ள 648 நகர்ப்புற உள்ளாட்சிகளுக்கான தேர்தல் வாக்குப்பதிவு நேற்று முன்தினம் அமைதியாக நடந்து முடிந்தது.
மொத்தம் உள்ள 489 பேரூராட்சிகளில் 74.68 சதவீதம், 138 நகராட்சிகளில் 68.22 சதவீதம், 21 மாநகராட்சிகளில் 52.22 சதவீதம் என மொத்தம் 60.70 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளன. அதிகபட்சமாக தருமபுரி மாவட்டத்தில் 80.49 சதவீதம், குறைந்தபட்சமாக சென்னையில் 43.59 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளன.
மேலும் இதர மாவட்டங்களான அரியலூர்-75.69 சதவீதம், செங்கல்பட்டு- 55.30 சதவீதம், கோவை- 59.61 சதவீதம், கடலூர்-71.53 சதவீதம், திண்டுக்கல்- 70.65 சதவீதம்,ஈரோடு- 70.73 சதவீதம், கள்ளக்குறிச்சி-74.36 சதவீதம், காஞ்சிபுரம்-66.82 சதவீதம், கன்னியாகுமரி-65.72 சதவீதம், கரூர்-76.34 சதவீதம், கிருஷ்ணகிரி-68.52 சதவீதம், மதுரை-57.09 சதவீதம், மயிலாடுதுறை-65.77 சதவீதம், நாகப்பட்டினம்-69.
19 சதவீதம், நாமக்கல்-76.86 சதவீதம், பெரம்பலூர்-69.11 சதவீதம், புதுக்கோட்டை-69.61 சதவீதம், ராமநாதபுரம்- 68.03 சதவீதம், ராணிப்பேட்டை-72.24 சதவீதம், சேலம்-70.54 சதவீதம், சிவகங்கை-67.19 சதவீதம், தென்காசி-70.40 சதவீதம், தஞ்சாவூர்-66.12 சதவீதம், தேனி-68.94 சதவீதம், நீலகிரி-62.68 சதவீதம்,தூத்துக்குடி-63.81 சதவீதம், திருச்சி-61.36 சதவீதம், திருநெல்வேலி-59.65 சதவீதம், திருப்பத்தூர்-68.58 சதவீதம், திருப்பூர்-60.66 சதவீதம், திருவள்ளூர்-56.61 சதவீதம், திருவண்ணாமலை-73.46 சதவீதம், திருவாரூர்-68.25 சதவீதம், வேலூர்-66.68 சதவீதம், விழுப்புரம்-72.39 சதவீதம், விருதுநகர்-69.24 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளன.
வாக்குச்சாவடிகளில் இருந்து பாதுகாப்புடன் நேற்று முன்தினம் எடுத்து வரப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், வார்டு வாரியாக பிரிக்கப்பட்டு, 268 வாக்கு எண்ணும் மையங்களில் ஸ்ட்ராங் ரூம் எனப்படும் பாதுகாக்கப்பட்ட அறைகளில் வைக்கப்பட்டுள்ளன. இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைகளின் உள்ளேயும், வெளியேயும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு 24 மணி நேரமும் தீவிரமாககண்காணிக்கப்பட்டு வருகிறது. வேட்பாளர்களின் முகவர்கள் கண்காணிக்கும் விதமாக பெரிய திரைகளிலும் சிசிடிவி காட்சிகள் ஒளிபரப்பப்பட்டு வருகிறது.
நாளை (பிப்ரவரி 22) காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்குகிறது. அதற்கான ஏற்பாடுகளை மாநில தேர்தல் ஆணையம் செய்து வருகிறது.
முதலாவதாக தபால் ஓட்டுக்கள் எண்ணப்பட்டு அறிவிக்கப்படும். அதைத் தொடர்ந்து வேட்பாளர்கள் அல்லது வேட்பாளர்களின் முகவர்கள் முன்னிலையில் சீல் வைக்கப்பட்ட இயந்திரம் சீல் அகற்றப்பட்டு, அதைத் தொடர்ந்து வாக்கு எண்ணிக்கை நடைபெறும்.
ஒவ்வொரு சுற்று வாக்கு எண்ணிக்கை முடிந்தவுடன் அங்குள்ள வேட்பாளர்கள், முகவர்கள் முன்னிலையில் அறிவிக்கப்படும். மேலும், பொதுமக்கள் தெரிந்து கொள்ளும் வகையில் ஒலிபெருக்கி மூலமும் சுற்று முடிவுகள் அறிவிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. காலை 9 மணி முதல் வேட்பாளர்களின முன்னணி நிலவரம் தெரியவரும்.
இதையும் படியுங்கள் || 3ஆம் உலக போர் நடைபெறுமா? உக்ரைன் – ரஷியா எல்லையில் நடப்பது என்ன?