இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட ஆட்சித்தலைவர் விஷ்ணு சந்திரன், தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது.
குறைதீர்க்க நடவடிக்கை எடுக்கபடும்
இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பொதுமக்களிடம் பல்வேறு கோரிக்கைகள் குறித்த 291 மனுக்கள் பெற்று மனுதாரரின் முன்னிலையில் மனுக்களை விசாரணை செய்து தொடர்புடைய அலுவலர்களிடம் மனுக்களை வழங்கி உரிய நடவடிக்கையினை விரைந்து மேற்கொள்ள அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். வீட்டுமனைபட்டா, முதியோர் உதவித்தொகை, தனிநபர் விடு வழங்கும் திட்டம், குடிநீர் இணைப்பு வழங்குதல் உள்ளிட்டவை தொடர்பாக பொதுமக்கள் மனுக்களை அளித்தனர். மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவிக்கையில், ஒவ்வொரு வாரமும் பொதுமக்களிடம் பெறக்கூடிய மனுக்களுக்கு உரிய நடவடிக்கை மேற்கொண்டு ஒரு மாத காலத்திற்குள் மனுதாரர்களுக்கு உரிய தீர்வு வழங்கிட வேண்டும் எனவும், தீர்வு வழங்கமுடியாத மனுக்கள் நிலை குறித்து மனுதாரர்களிடம் அலுவலர்கள் எடுத்துரைக்க வேண்டும் எனவும் அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். மேலும் பொதுமக்கள் வழங்கும் மனுக்களுக்கு துறைசார்ந்த அலுவலர்கள் சிறப்புகவனம் எடுத்து செயல்பட வேண்டுமென மாவட்டஆட்சித்தலைவர் விஷ்ணு சந்திரன், தெரிவித்தார்.
நிவாரண நிதி மற்றும் ஊக்கத்தொகை
அதனைத்தொடர்ந்து, சமூக பாதுகாப்புத் திட்டத்தின் கீழ், முதலமைச்சர் பொது நிவாரண நிதியில் இருந்து வரப்பெற்ற நிவாரண தொகை ரூ.1இலட்சத்திற்கான காசோலையினையும், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் மூலம் காது மற்றும் வாய் பேச இயலாத மாற்றுத்திறனாளிகள் மற்றும் பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு தக்க செயலிகளுடன் கூடிய கைபேசி வழங்கும் திட்டத்தின் கீழ் 8 பயனாளிகளுக்கு ரூ.1,08,392/- மதிப்பிலான (ஸ்மார்ட் போன்) உபகரணங்களையும் மாவட்டஆட்சித்தலைவர் விஷ்ணு சந்திரன், பயனாளிகளுக்கு வழங்கினார்.
இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் கோவிந்தராஜலு , தனித்துணை ஆட்சியர் (சமூகபாதுகாப்புதிட்டம்) மாரிச்செல்வி மற்றும் அரசு அலுவலர்கள் உட்படபலர் கலந்து கொண்டனர்.