ஆயுத படைகளில் பெண்களுக்கு முக்கிய பங்கு: பிரதமர் மோடி
புதுடில்லி: ஆயுத படைகளில் பெண்களுக்கு அதிகளவு பங்கு அளிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த பிரதமர் நரேந்திர மோடி, என்சிசி படைகளில் இன்னும் அதிகளவு பெண்கள் இணைய வேண்டும் எனவும் கூறியுள்ளார்.
டில்லியில் கரியப்பா மைதானத்தில் என்.சி.சி., படையினர் ஏற்பாடு செய்த நிகழ்ச்சி நடந்தது. அதில், அவர்கள் தங்களது திறமைகளை வெளிப்படுத்தியதுடன், சாகசங்களை செய்து காட்டினர். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரதமர் நரேந்திர மோடி, என்சிசி படையினரின் திறமைகளை பார்வையிட்டதோடு, அவர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்று கொண்டார். தொடர்ந்து சிறந்த வீரர்களுக்கு பரிசுகளையும் மோடி வழங்கினார்.
பின்னர் நரேந்திர மோடி பேசியதாவது: தேசமே முதன்மை என்ற எண்ணம் அனைவரிடத்திலும் பரவ வேண்டும். நானும் என்சிசி.,யின் உறுப்பினர் என்பதில் பெருமை கொள்கிறேன். என்சிசியை பலப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்தது. இன்றைய பேரணியில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனர்.
இது, இந்தியாவில் ஏற்பட்டுள்ள மாற்றங்களை எடுத்து காட்டுகிறது. கடந்த 2 ஆண்டுகளில் சுமார் ஒரு லட்சம் என்சிசி படையினர் எல்லை பகுதியில் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். ஆயுத படைகளில் பெண்களுக்கு அதிக பொறுப்பு வழங்கப்பட்டு உள்ளது. இன்னும் அதிகளவு பெண்கள் என்சிசியில் இணைய வேண்டும். இவ்வாறு பிரதமர் பேசினார்.
மேலும் தகவலுக்கு இங்கே கிளிக் செய்யவும்