சிவகங்கை அரசு கிராபைட் ஆலையில் வெடி வைத்து கிராபைட் எடுக்க கிராம மக்கள் எதிர்ப்பு
சிவகங்கை :
சிவகங்கை அரசுகிராபைட் தொழிற்சாலையில் வெடி வைத்து கிராபைட் எடுக்க கிராம மக்கள் எதிர்ப்புத் தெரிவித்தனர். சிவகங்கை அருகே கோமாளிப்பட்டியில் தமிழ்நாடு தாது நிறுவனம் (டாமின்) சார்பில் 1994ம் ஆண்டு முதல் அரசு கிராபைட் தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. இங்கு வெட்டி எடுக்கப்படும் கிராபைட் கனிமம் ஆந்திரா, ஒடிசா உள்ளிட்ட மாநிலங்க ளுக்கு அனுப்பப்படுகின்றன. 2016-ம் ஆண்டு இந்த தொழிற்சாலையில் 60 ஆயிரம் டன் கிராபைட் உற்பத்தியை 1.05 லட்சம் டன்னாக உயர்த்த முடிவு செய்யப்பட்டது. இதற்காக வெட்டி எடுக்கும் பகுதியை மேலும் 236.85 ஹெக்டேருக்கு விரிவாக்கம் செய்ய கருத்துக் கேட்புக் கூட்டம் சிவகங்கையில் நடந்தது. தற்போது அரசிடம் அனுமதி கிடைத்துள்ள நிலையில் விரிவாக்கப்பகுதியில் கிராபைட்டை வெட்டி எடுக்க ஆலை நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்கு முடிகண்டம் ஊராட்சி மீனாட்சி புரம் கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இது குறித்து அவர்கள் கூறியதாவது: எங்கள் கிராமத்தில் 300 குடும்பங்கள் வசிக்கின்றன. கிராபைட் எடுக்க தேர்வு செய்யப்பட்டுள்ள பகுதி எங்கள் கிராமத்தில் இருந்து 200 மீ. தூரத்தில்தான் உள்ளது. கிராபைட்டை வெடிவைத்து எடுக்கும்போது வீடுகளில் விரிசல் ஏற்பட வாய்ப்புள்ளது. கிராபைட் வெட்டி எடுக்கும்போது ஏற்படும் பள்ளத்தில் நிலத்தடி நீர் சென்றுவிடும். இதனால் விவசாயக் கிணறுகளில் தண்ணீர் இல்லாமல் விவசாயமும் பாதிக்கப்படும். கிராபைட் எடுக்கும் திட்டத்தைக் கைவிட வேண்டும். இதுகுறித்து மாவட்ட ஆட்சியரிடம் மனுக் கொடுத்துள்ளோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.