குண்டர் சட்டம் பாயுமா.
சிவகங்கை மாவட்டம், இளையான்குடி தாலுகாவிற்கு உட்பட்ட கச்சாத்தநல்லூர், புதூர், சாத்தனூர், பரத்தவயல் உட்பட பல்வேறு பகுதிகளில் இரவு நேரங்களில் தொடர்ந்து ஜே.சி.பி இயந்திரம் மூலம் லாரி, டிராக்டர்களில் மணல் ஏற்றப்பட்டு மணல் திருட்டு தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் அதை தடுக்க வேண்டிய அதிகாரிகள் தடுக்காமல் சம்பந்தப்பட்ட மணல் திருடர்களுக்கு ஆதரவாக செயல்பட்டு வருவதாகவும் அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
அலட்சியம்
இரவு நேரங்களில் டிராக்டர்கள் மற்றும் டிப்பர் லாரிகளில் திருட்டுத்தனமாக மணல் அள்ளி செல்வதாக அப்பகுதி மக்கள் அதிகாரிகளுக்கு புகார் கூறுகின்றனர். ஆனால் சம்பந்தப்பட்ட காவல்துறை மற்றும் வருவாய் துறையினர் அலட்சியம் காட்டுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
போராட்டம், முதல்வர் தனிப்பிரிவு
இதே நிலை தொடர்ந்து நீடித்தால் அப்பகுதி மக்கள் அனைவரும் ஒன்று திரட்டி போராட்டம் செய்ய விருப்பதாகவும், அதேபோல் முதல்வர் தனிப்பிரிவுக்கு புகார் தெரிவிக்க இருப்பதாகவும் ஊர் பொதுமக்கள் தகவல் தெரிவிக்கின்றன.
மணல் திருடர்களுக்கு தகவல்
மேலும் இப்பகுதியில் நம்பர் பிளேட் இல்லாத டிராக்டர்கள், டிப்பர் லாரிகள் மூலம் இரவு பகல் பாராமல் தொடர்ந்து அதிகாரிகளின் ஆசியோடு மணல் கொள்ளை நடைபெற்று வருகிறது. ஒரு வேளை பொதுமக்கள் இரவு நேரங்களில் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தால் உடனடியாக சம்பந்தப்பட்ட மணல் திருடர்களுக்கு தகவல் தெரிவிக்கின்றனர்.
கருப்பு ஆடு
காவல்துறை, வருவாய் துறையை சேர்ந்த சில கருப்பு ஆடுகள் மணல் திருடர்களுக்கு ஆதரவாக செயல்பட்டு வருகின்றனர். மணல் திருடர்களுக்கு ஆதரவாக செயல்படும் அதிகாரிகளின் செல்போன் எண்ணை ஆய்வு செய்தாலே எந்த அளவிற்கு மணல் திருடர்களுக்கு ஆதரவாக செயல்படுகிறார்கள் என்பது தெரியவரும்.
மக்கள் சந்தேகம்
இதனால் அதிகாரிகள் சம்பந்தப்பட்ட இடத்திற்கு சென்று ஆய்வு செய்வதற்குள் திடீரென மணல் திருடர்கள் காணாமல் மறைந்து விடுகின்றனர். காவல்துறை, வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு எந்த பகுதியில் எந்த நபர்கள் மணல் திருடுகிறார்கள் என்பது நன்றாகவே தெரியும். இது தெரிந்தும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காமல் இருப்பது பொதுமக்கள் மத்தியில் பல்வேறு சந்தேகங்களை எழுப்பி வருகிறது.
குண்டர் தடுப்புச் சட்டம்
எனவே மணல் திருடர்கள், மணல் திருடர்களுக்கு ஆதரவாக செயல்படும் அதிகாரிகள் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் மாவட்ட ஆட்சியருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படியுங்கள் || பரமக்குடியில் மனித உயிரோடு விளையாடும் “போலி” நர்சிங் கல்லூரிகள்