05.11.2022 சனி பிரதோஷம்
திரியோதசி திதியும் சனிக் கிழமையும் சேர்ந்து வருவது சனி பிரதோஷம். பிரதோஷங்களில் மிக முக்கியமானது சனி பிரதோஷம் ஆகும்
சனி பிரதோஷ சிறப்புகள்
சிவபெருமான், தேவர்களைக் காப்பாற்றுவதற்காக ஆலகால நஞ்சை உண்ட நாள் சனிக்கிழமை. எனவே பிரதோஷ நேரம் சனிக்கிழமை அன்று வந்தால் சனி பிரதோஷம் எனச் சிறப்பு பெறுகிறது.
துன்பங்கள் நீங்க
பிரதோஷ தினத்தில் சிவனை முப்பது முக்கோடி தேவர்கள் பிரம்மா, விஷ்ணு அனைவரும் வணங்கி ஆசி பெறுவார்கள். அவர்களைப் போலவே பிரதோஷ நேரத்தில் நாமும் சிவபெருமானை வணங்கி நம் துன்பங்களை அடியோடு போக்கிக்கொள்ள பிரதோஷ வழிபாட்டை செய்ய வேண்டும்.
பிரதோஷ மகிமை
எத்தனை பெரிய துன்பமாக இருந்தாலும் பிரதோஷ காலத்தில் விரதம் இருந்து காராம் பசுவின் கறந்த பாலைக் கொண்டு சிவனையும், நந்தி பகவானையும் அபிஷேகம் செய்து வில்வ இலை, சங்குப்பூ வைத்து வழிபட்டால் பூர்வ ஜென்ம கர்ம வினைகளும், நாம் செய்த பாவங்களும் நீங்கி நல்ல பலன் கிடைக்கும்.
தோஷங்கள் நீங்கிவிடும்
பொதுவாக ஜாதகத்தில் எந்த தோஷம் இருந்தாலும் பிரதோஷத்தில் எல்லா தோஷமும் நீங்கிவிடும். அதேபோல் நாம் செய்த கர்ம வினைகளுக்கு ஏற்ப ஏழரைச் சனி, அர்த்தாஷ்டம சனி, கண்ட சனி, அஷ்ட மச்சனி ஆகியவற்றால் பாதிக்கப்படுபவர்கள், சனி பிரதோஷ வழிபாட்டை முறையாக மேற்கொண்டால் சனீஸ்வர பகவானின் கோபம் தணிந்து துன்பங்கள் நீங்கும்.
வழிபடும் முறை
சனி பிரதோஷத்தன்று, மாலை வேளை சூரிய அஸ்தமனத்திற்கு முன் 24 நிமிடங்களும், சூரிய அஸ்தமனத்திற்கு பின் 24 நிமிடங்களும் உள்ள 48 நிமிடங்கள் பிரதோஷ காலமாகும் இந்த நேரத்தில் வழிபாடு செய்வது சாலச் சிறந்தது.
விரத முறை
வளர்பிறை, தேய்பிறை என்ற இரண்டு பட்சங்களிலும் வரும் திரயோதசி திதியன்று காலையில் எழுந்து நீராடி, சிவநாம சிந்தனையுடன் சிவாலயம் சென்று வழிபட வேண்டும். அன்று முழுவதும் உணவின்றி உபவாசம் இருக்க வேண்டும்.
ரிஷப வாகனம்
பிரதோஷ நேரத்தில் தேவியும் சந்திரசேகரும் ரிஷப வாகனத்தில் ஆலயத்தை மூன்று முறை வலம் வருவதை வணங்க வேண்டும். நமசிவாய என்னும் ஐந்தெழுத்து மந்திரத்தை ஓத வேண்டும்.
நாதஸ்வர இசை
முதல் சுற்றில் செய்யப்படும் வேதபாராயணத்தையும், இரண்டாம் சுற்றில் செய்யப்படும் திருமுறை பாராயணத்தையும் மூன்றாவது சுற்றில் செய்யப்படும் நாதஸ்வர இன்னிசையையும் உடன் வலம் வந்து கேட்க வேண்டும்.
பிரதோஷ பலன்கள்
பிரதோஷ தினத்தில் சிவபெருமானை வழிபடுவதால் சுபமங்கலம், நல்லெண்ணம் நல்லருள் கிடைக்கும். பஞ்சம், வறுமை, பட்டினி அகலும்.
அறிவு, நினைவாற்றல்
பிரதோஷ தின பூஜை மேற்கொள்ளும் போது அறிவு வளரும், நினைவாற்றல் பெருகும், தோஷங்கள் நீங்கும். எவ்வளவு பெரிய தோஷமாக இருந்தாலும் பிரதோஷ காலத்தில் விரதம் இருந்து பசுவின் கறந்த பாலைக் கொண்டு சிவனை அபிஷேகம் செய்து சங்குப்பூ வைத்து வழிபட்டால் சிறப்பான பலன்கள் கிடைக்கும்.
குழந்தை பாக்கியம்
பிரதோஷ விரதம் மேற்கொண்டால் குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். திருமணமாகாத கன்னி பெண்களுக்கு விரைவில் திருமணம் நடைபெறும். வறுமை நீங்கி செல்வம் பெருகும் மேலும் தொழில் மேன்மை அடையும், கடன் பிரச்சனைகள் தீரும். போட்டித் தேர்வு எழுதுபவர்களுக்கு எளிதில் வெற்றி கிடைக்கும்.
பிறப்பே இல்லாத முக்தி
சனிக்கிழமை பிரதோஷ காலங்களில் ஈசனை தரிசிப்பதால் சகல பாவங்களும் விலகி புண்ணியம் சேரும், சகல சௌபாக்கியங்களும் உண்டாகும். இந்திரனுக்கு சமமான புகழும், செல்வாக்கும் கிடைக்கும். மேலும், பிரதோஷ தினத்தன்று செய்யப்படும் தானம் அளவற்ற பலன் கொடுக்கும். பிறப்பே இல்லாத முக்தியை கொடுக்கும் என்று புராணங்கள் தெரிவிக்கின்றன.
ஆயிரம் மடங்கு பலன்
ஒரு சனிப்பிரதோஷத்தன்று சிவாலயம் சென்றால், ஐந்து வருடங்கள் தினமும் சிவாலயம் சென்றுவந்த புண்ணியம் கிடைக்கும். சனி பிரதோஷம், சாதாரண பிரதோஷ வழிபாடு தரும்பலன்கள் போன்று ஆயிரம் மடங்கு பலன் தரக் கூடியது ஆகும்.
வில்வமாலை, திராட்சை மாலை
சனி பிரதோஷத்தன்று மாலை வேளையில் சிவாலயங்களுக்கு சென்று உங்களால் இயன்ற அபிஷேகப் பொருட்களை அளித்து அபிஷேகம் செய்து நந்தி பெருமானை வழிபட சிவபெருமானின் பரிபூரண அருள் கிடைக்கும் அன்றைய தினம் நந்திக்கும், சிவபெருமானுக்கும் வில்வ மாலை, திராட் சை மாலை அணிவிப்பது நற்பலன்களை தரும்.