முதுகுளத்தூர் சார்நிலை கருவூலத்தில் 29 லட்சம் கையாடல்
ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர் சார்நிலை கருவூலத்தில் கணக்கராகப் பணிபுரிந்து வருபவர் முனியசாமி. இவர் கடந்த நவ.7-ம் தேதி அலுவலக ஓய்வூதியக் கணக்கில் இருந்த பணத்தைத் தன்னுடைய நண்பர் ஜீவா வங்கிக் கணக்குக்கு ரகசியக் குறியீட்டைப் பயன்படுத்தி ரூ.9,24,972 அனுப்பி கையாடல் செய்தார்.
அதேபோல் கடந்த டிச.5-ம் தேதி முனியசாமி தனது வங்கிக் கணக்கில் ரூ.20 லட்சம் அனுப்பி கையாடல் செய்தது, கருவூலத்தில் நடைபெற்ற தணிக்கையின்போது ரூ.29 லட்சம் கையாடல் செய்தது தெரியவந்தது.
எஸ்.பி.யிடம் புகார்
இதனை தொடர்ந்து முதுகுளத்தூர் உதவி கருவூல அதிகாரி சையது சிராஜுதீன் கணக்கர் முனியசாமி செய்திருக்கும் பண மோசடி குறித்து ராமநாதபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தங்கதுரையிடம் புகார் அளித்தார்.
உத்தரவின் பேரில் ராமநாதபுரம் மாவட்ட குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் சுந்தரபாண்டியன், கந்தசாமி ஆகியோர் சார்நிலை கருவூலத்தில் அரசுப் பணத்தைக் கையாடல் செய்த கணக்கர் முனியசாமி மீது வழக்கு பதிவு செய்து தீவிரமாக தேடி வருகின்றனர்.