இயற்கையான முறையில் அழகிற்கு அழகு சேர்ப்பதற்கான சின்ன டிப்ஸ்.
பெண்கள் அழகின் மீதுள்ள அதிக அக்கறையால் பியூட்டி பார்லர் சென்று தங்கள் அழகை மெருகேற்றிக் கொள்கின்றனர். இதனால் அதிக பணம் செலவாவதுடன், ரசாயனம் கலந்த க்ரீம்களால் முகத்தில் அலர்ஜியும் ஏற்படுகிறது. அதனால், வீட்டிலேயே இருக்கும் பொருட்களைக் கொண்டு என்றும் அழகுடன் எப்படி இருப்பது என்பதை இங்கே பார்க்கலாம்.
நகங்களை வெட்டும் முன் எண்ணெயை தடவிவிட்டு, சிறிது நேரம் கழித்து நகத்தை வெட்டினால் விரும்பும் வடிவத்திலும், அழகாகவும் வெட்ட இயலும்.
கூந்தலில் எண்ணெய் பசை அதிகமாக இருந்தால், கோழி முட்டையில் கொஞ்சம் சர்க்கரையை கலந்து தலையில் லேசாக தடவிக்கொண்டு பிறகு தலைக்கு குளிக்க வேண்டும். இதனால் எண்ணெய் பசை நீங்கி முடி அழகு பெறும்.
இளம் சூடான ஒரு லிட்டர் நீரில், இரண்டு ஸ்பூன் உப்பைப் போட்டு, கண்களை கழுவினால் கண்கள் பிரகாசமாக இருக்கும்.
கற்றாழை ஜெல்லை கண்களில் உள்ள கருவளையங்களின் மீது அப்ளை செய்து சிறிது நேரம் மசாஜ் செய்ய வேண்டும். இதை தொடர்ந்து 10 நாட்கள் வரை செய்து வர கருவளையங்கள் மறையும்.
கை, கால் முட்டிகளில் கறுப்பு நிறம் அதிகமாக இருந்தால், தொடர்ந்து அந்த இடத்தில் எலுமிச்சை பழச்சாற்றை தேய்த்து, சோப்பு போட்டு குளிக்க வேண்டும். நாளடைவில் கறுப்பு நிறம் போய்விடும்.
தோல் சுருக்கம் இருந்தால் ஆலிவ் ஆயிலைப் பூசி, சிறிது நேரம் ஊற வைத்து, சோப்பு போட்டு குளிக்க வேண்டும்.
தக்காளி அல்லது ஆப்பிள் பழத்தை அரைத்து முகத்தில் தடவினால் சருமத்தில் உள்ள எண்ணெய் பசை குறையும்.
பப்பாளிப் பழத்தை அரைத்து சிறிதளவு தேன், பால் இரண்டையும் கலந்து முகத்தில் பூசி, சிறிது நேரம் ஊற வைத்து முகத்தைக் கழுவினால் முகம் பளிச்சென மாறும்.
பழுத்த வாழைப்பழத்தை நன்றாகப் பிசைந்து முகத்தில் தடவி, 20 நிமிடம் கழித்து கழுவினால், சருமம் மென்மையாக மாறும்.
உலர்ந்த சருமம் மென்மையாக கேரட்டை நன்றாக அரைத்து, ஒரு ஸ்பூன் தேன் கலந்து, 20 நிமிடம் உடலில் பூசி, பின் குளிர்ந்த நீரில் கழுவி விட வேண்டும்.
வெண்ணெயுடன் ஆரஞ்சு பழச்சாறு கலந்து, உதடுகளில் தடவி வந்தால், வெடிப்புகள் மறைந்து உதடுகள் மென்மையாகும்.
மஞ்சள்தூள் மற்றும் பாலாடை கலந்த கலவையை உடம்பில் தேய்த்துக் குளிக்க, உடல் பொலிவுடன் பிரகாசிக்கும்.