பரமக்குடி நகராட்சிக்கு வரிப்பாக்கி செலுத்தாதவர்கள் மீது நடவடிக்கை
நகராட்சி ஆணையாளர் திருமால் செல்வம் எச்சரிக்கை
பரமக்குடி நகராட்சிக்கு சொத்து வரி, குடிநீர் கட்டணம், தொழில்வரி, காலியிட வரி, குத்தகை பாக்கியை நீண்ட நாட்கள் கட்டாமல் வைத்துள்ளவர்களின் பெயர் பட்டியல் விவரங்களை நாளிதழ்கள், விளம்பர பதாதைகள் மூலம் வெளியிடப்படும் என நகராட்சி ஆணையாளர் திருமால் செல்வம் எச்சரித்துள்ளார்.
அடிப்படை வசதிகள்
இதுகுறித்து செய்தி குறிப்பில் கூறியதாவது, “பரமக்குடி நகராட்சிக்கு உட்பட்ட 36 வார்டுகளில் வசிக்கும் பொது மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை நகராட்சி நிதியிலிருந்து மேற்கொள்ள திட்டம் தீட்டப்பட்டுள்ளது. இந்நிலையில் நகராட்சி மூலம் அறிவிப்புகள் வழங்கியும், நகராட்சி பணியாளர்கள் தொடர்ந்து வலியுறுத்தியும், நகராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்து வரி, குடிநீர் கட்டணம், தொழில்வரி, காலியிட வரி, குத்தகை பாக்கி செலுத்தாமல் நீண்ட நாட்களாக நிலுவையில் வைத்துள்ளனர்.
நிதிநிலை பற்றாக்குறை
இதனால் நகராட்சி நிதிநிலை மிகவும் பற்றாக்குறையாக உள்ளதால் பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை உடனுக்குடன் செய்ய இயலாத சூழ்நிலை உள்ளது. நகராட்சி சட்ட விதிகளின்படி ஒவ்வொரு ஆண்டும் முதல் அரையாண்டுக்கான சொத்து வரியை ஏப்ரல் 31 ஆம் தேதிக்குள், இரண்டாம் அரையாண்டுக்கான சொத்து வரியினை அக்டோபர் 30ஆம் தேதிக்குள்ளும் நகராட்சிக்கு செலுத்த வேண்டும்.
வளர்ச்சிப் பணிகள் பாதிப்பு
நகராட்சியில் வரி வசூல் 100 சதவீதம் இருந்தால் மட்டுமே நகர வளர்ச்சிக்கு தேவையான திட்ட பணிகளை உடனுக்குடன் செய்ய முடியும். எனவே சொத்து வரி விதிப்புதாரர்கள், குடிநீர் கட்டண நிலுவைதாரர்கள் காலிமனை வரி நிலுவைதாரர்கள் கடை மற்றும் குத்தகைதாரர்கள் தொழில் வரி இதர கட்டணங்களை நகராட்சிக்கு செலுத்தாமல் நிலுவை வைத்துள்ள அனைவரும் நகராட்சிக்கு செலுத்த வேண்டிய வரி மற்றும் கட்டணங்களை 7 தினங்களுக்குள் நகராட்சி கருவூலத்தில் செலுத்த வேண்டும்.
வரிப்பாக்கி – ஜப்தி, சீல்
பொதுமக்கள் நலன் கருதி சனி, ஞாயிற்று கிழமைகளில் வரி வசூல் மையம் செயல்படும். அதே நேரம் அறிவிப்புகள் தொடர் அறிவிப்புகள் மூலமும் நகராட்சி பணியாளர்களால் பலமுறை வலியுறுத்தியும், இதுவரை வரி மற்றும் கட்டணம் செலுத்தாத நிலுவைதாரர்களின் பெயர் பட்டியல், நாளிதழ்கள் மற்றும் விளம்பர பலகை மூலம் வெளியிட்டும் 1920 ஆம் ஆண்டு மாவட்ட நகராட்சிகளின் சட்ட பிரிவுகளின் படி ஜப்தி மற்றும் சீல் வைக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.” என தெரிவித்துள்ளார்.