சினிமா பிரபலங்களை குறிவைத்து திருடும் பரமக்குடியைச் சேர்ந்த அ.தி.மு.க முக்கியபுள்ளி மகன்
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியை சேர்ந்தவர் மணிவாசகம். இவர் பரமக்குடி பஜார் பகுதியில் நகை கடை நடத்தி வருகிறார்.
இவரது மகன் விக்னேஷ் பட்டதாரியான இவர் ஆடம்பரமாய் வாழ்வதற்கு ஆசைப்பட்டு வாழ்ந்து வந்துள்ளார்.
இதற்காக மதுரை, சென்னை போன்ற ஊர்களுக்கு சென்று அங்கு உள்ள அரசியல்வாதிகள், சினிமா பிரபலங்கள் போன்ற நபர்களிடம் பழக்கத்தை ஏற்படுத்தி வந்துள்ளார்.
அவருடன் நெருங்கிப் பழகி புகைப்படம் எடுத்து அதனை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வந்துள்ளார். அப்படி பழகும் முக்கிய பிரமுகர் உடன் நம்பிக்கையோடு இருந்து அவர்களது இல்லங்களில் நடைபெறும் முக்கிய விழாக்களில் பங்கு கொள்வார்.
இப்படி பங்குகொள்ளும் இல்ல விழாக்களில் தனது கைவரிசையை காட்ட ஆரம்பித்துள்ளார். சில மாதங்களுக்கு முன்பு மதுரையில் நடந்த போலீஸ் உயரதிகாரி மகள் பிறந்தநாள் விழாவில் பங்கேற்ற விக்னேஷ் அவரது மகள் கழுத்தில் கிடந்த வைர நெக்லஸை திருடிச் சென்றுள்ளார்.
விஷயம் அறிந்த காவல்துறையினர் அப்போது அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். அதன் பின்னர் விக்னேஷ் தொடர்ந்து முக்கிய பிரமுகரிடம் தனது கைவரிசையை காட்டியுள்ளார். இதனால் பல ஊர்களில் உள்ள காவல் நிலையங்களில் இவர் மீது பல வழக்குகள் நிலுவையில் உள்ளன.
இந்நிலையில் நேற்று முன்தினம் மதுரையில் நடைபெற்ற நடிகர் சூரியின் அண்ணன் மகள் திருமண விழாவில் பங்கேற்ற விக்னேஷ் அங்கு 10 பவுன் நகையை திருடிச் சென்றுள்ளார்.
இதுகுறித்து அங்கு பதிவான கண்காணிப்பு கேமரா காட்சிகளை அடிப்படையாகக் கொண்டு காவல் துறையினர் தனிப்படை அமைத்து விக்னேஸ்வரனை தேடி வந்தனர்.
அவர் பரமக்குடியில் உள்ள சொந்த வீட்டில் தங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் நேற்று இரவு பரமக்குடி வந்த போலீசார் விக்னேஷை அவரது வீட்டில் வைத்து கைது செய்தனர்.
அவரிடம் விசாரித்தபோது அவர் பத்து பவுன் நகை திருடியதை ஒப்புக்கொண்டார். பிறகு அவரை மதுரை அழைத்து சென்று போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
தொடர்ந்து இது போன்ற முக்கிய வி.ஐ.பி.களின் வீடுகள், கல்யாணங்களில் திருட்டில் ஈடுபடும் விக்னேஷ் பற்றி தெரிந்ததும் பரமக்குடி மக்கள் பெரும் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.