பரமக்குடி அருகே பழங்கால உயர்குடி பெண் நடுகல் சிற்பம் கண்டுபிடிப்பு
பரமக்குடி தாலுகா வழிமறிச்சான் கிராமத்தில் பழமையான உயர்குடி பெண் நடுகல் சிற்பம் கண்டுபிடிப்பு.
வழிமறிச்சான் கிராமத்தை சேர்ந்த ராமர் என்பவர் கொடுத்த தகவலின் படி பாண்டியநாடு பண்பாட்டு மையத்தைச் சேர்ந்த தாமரைக்கண்ணன்,
மீனாட்சிசுந்தரம் மற்றும் வழிமறிச்சானை சேர்ந்த சிவா, சக்தி, முருகன் ஆகியோர் அங்கு சென்று கள ஆய்வு மேற்கொண்டனர். அந்த சிற்பம் ஒரு உயர் குடியைச் சேர்ந்த மூதாட்டிக்கு எடுக்கப்பட்ட நடுகல் என்பதை கண்டறிந்தனர்.
நடுகல் எடுக்கும் வழக்கம்
பொதுவாக நடுகல் என்பது முற்காலங்களில் வீர தீர செயல்களான போர்களில் ஈடுபடும் வீரர்களுக்கோ அல்லது விலங்குகளுக்கு எதிரான சண்டைகளில் வெற்றி பெறுபவர்களுக்கோ அல்லது சண்டையில் இறப்பவர்களுக்கோ அல்லது சமூகத்தில் பெரிதும் போற்றத்தக்க நபர்களுக்கோ நடுகல் எடுக்கும் வழக்கம் இருந்து வந்துள்ளது. தற்போது நாங்கள் கண்டறிந்த சிற்பமும் அவ்வகையைச் சேர்ந்ததே ஆகும்.
ருத்ராட்ச மாலை, ஆபரணங்கள்
இந்த நடுகல் சிற்பம் இரண்டரை அடி உயரமும் ஒன்றரை அடி அகலமும் கொண்ட பலகை கல்லில் புடைப்புச் சிற்பமாக செதுக்கப்பட்டுள்ளது. இந்த சிற்பத்தின் இரண்டு கைகளிலும் காப்பும் கை வளையல்களும் அணிந்த படியும் கழுத்தில் ருத்ராட்ச மாலையும், ஆபரணங்களும் நீண்ட காதும் தெளிவாக செதுக்கப்பட்டுள்ளது. இடையில் இடைக்கச்சை அணிந்த படியும் இரு கால்களிலும் கழலைகள் அணிந்த படியும் சிற்பம் நேர்த்தியாக வடிக்கப்பட்டுள்ளது.
கிழவி அம்மன் வழிபாடு
மேலும் இடது கையில் ஊன்றுகோல் தடியை பிடித்தவாறு செதுக்கப்பட்டுள்ளது. நெற்றியில் திலகம் செதுக்கியிருப்பது கூடுதல் சிறப்பாகும். இந்த புடைப்பு சிற்பம் வயது முதிர்ந்த ஒரு மூதாட்டியின் சிற்பமாகும். இந்த சிற்பத்தின் வடிவமைப்பும் அணிந்துள்ள ஆபரணங்களையும் வைத்து பார்க்கும் போது ஒரு உயர் குடியைச் சேர்ந்த பெண்ணாகவோ அல்லது சமூகத்தில் மிகவும் மதிக்கத்தக்க பெண்மணியாகவோ இருந்திருக்கலாம். தற்போது இந்த நடுகல்லை பாட்டி கிழவி அம்மன் என்ற பெயரில் அப்பகுதி மக்கள் காலந்தோறும் வழிபட்டு வருகின்றனர்.