தமிழ்நாடு அரசு அனைவருக்கும் வீடு என்ற இலக்கினை அடைந்திட வேண்டுமென்ற நோக்கத்தோடு செயலாற்றி வருகிறது. இந்த இலக்கினை அடைந்திட ஊரக பகுதிகளில் வாழும் வீடு இல்லாத தகுதியான நபர்களை கண்டறிய ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் மூலம் கணக்கெடுப்பு நடைபெற உள்ளது.
- இது தொடர்பாக ஏற்கனவே இத்துறையின் கீழ் சமூக பொருளாதார சாதிவாரி கணக்கெடுப்பு-2011, ஆவாஸ் பிளஸ் -2018, கலைஞர் வீடு வழங்கும் திட்டம் (மறு கணக்கெடுப்பு – 2021), கலைஞர் வீடு வழங்கும் திட்டம் புதிய குடிசைகள் கணக்கெடுப்பு – 2022 ஆகிய 4 பட்டியல்களாக உள்ளன.
- மேற்கண்ட பட்டியல்களில் விடுபட்ட தகுதியான குடும்பங்களை கண்டறிய இரண்டு பகுதிகளாக கணக்கெடுப்பு நடைபெற உள்ளது.
- பகுதி – 1: தற்போதுள்ள 4 கணக்கெடுப்பு பட்டியல்களில் ஒன்றுக்கும் மேற்பட்ட பட்டியலில் இடம் பெற்றிருக்கும் குடும்பங்களை ஒரு பட்டியலில் மட்டும் நீடிக்க செய்து மற்ற பட்டியல்களில் இருந்து நீக்கம் செய்தல்.
- பகுதி -2: குடிசைகள்/நிலைத்த தன்மையற்ற / வாழத் தகுதியற்ற வீடுகளில் வசிக்கும் அனைத்து குடும்பங்களும் கணக்கெடுக்கப்படும். இந்த கணக்கெடுப்பானது அனைத்து ஊராட்சிகளிலும் குக்கிராமங்கள் வாரியாக நடத்தப்பட வேண்டும். இக்கணக்கெடுப்பினை ஊராட்சி மன்றத்தலைவர், கிராம நிர்வாக அலுவலர், ஊராட்சி செயலர் சம்மந்தப்பட்ட கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் மற்றும் கிராம ஊராட்சி அளவிலான கூட்டமைப்பின் பிரதிநிதி ஆகிய 5 நபர்களைக் கொண்ட கணக்கெடுப்பு குழு மேற்கொள்ளும்.
- இக்கணக்கெடுப்பானது அனைத்து ஊராட்சிகளிலும் 12.12.2022 முதல் 06.01.2023 வரை மேற்படி குழு மூலம் மேற்கொள்ளப்படும். கணக்கெடுப்பு பட்டியல் 13.01.2023-க்குள் உரிய அலுவலர்களால் மேலாய்வு செய்யப்படும்.
- சரிபார்க்கப்பட்ட பட்டியல்கள் அனைத்தும் வரும் 14.01.2023 முதல் 20.01.2023-க்குள் இணையதளத்தில் பதிவு செய்யப்படும். பதிவேற்றம் செய்யப்பட்ட இறுதி பட்டியல்கள் பொது மக்கள் பார்வைக்காக 24.01.2023 மற்றும் 25.01.2023 ஆகிய இரு நாட்களில் சம்மந்தப்பட்ட ஊராட்சி அலுவலகத்தில் வைக்கப்படும்.
- பொதுமக்கள் யாருடைய பெயரும் விடுபட்டு இருப்பின் உடன் சம்மந்தப்பட்ட கிராம ஊராட்சி அலுவலகத்தில் தகவல் வழங்கி பெயரினை சேர்த்துக் கொள்ளலாம்.
- மேலும், இறுதி செய்யப்பட்ட பட்டியல் 26.01.2023 அன்று பொது மக்களின் ஏற்பிற்காக கிராம சபையின் பார்வைக்கு வைக்கப்படும் பொது மக்கள் இக்கணக்கெடுப்பு குழுவிற்கு தேவையான உண்மையான தகவல்களை உரிய காலத்தில் வழங்கி இக்கணக்கெடுப்பு சரியான முறையில் நடைபெற முழு ஒத்துழைப்பு வழங்கிடுமாறு தெரிவிக்கப்படுகிறது.