சர்வதேச பேரிடர் குறைப்பு தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி நிகழ்ச்சி நடைபெற்றது.
இராமநாதபுரம் மாவட்டம், தொண்டி பேரூராட்சியில் இன்று (13.10.2022) சர்வதேச பேரிடர் குறைப்பு தினத்தை முன்னிட்டு வருவாய்த்துறை மூலம் பேரிடர் காலத்தில் பொதுமக்கள் பாதுகாப்புடன் இருப்பது குறித்த விழிப்புணர்வு பேரணி நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ஜானி டாம் வர்கீஸ், இ.ஆ.ப., அவர்கள் தலைமையேற்று பேரணியை கொடியசைத்து துவக்கி வைத்து இப்பேரணியில் கலந்து கொண்டார்.
இப்பேரணியில் சுமார் 500 க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர்கள், தீயணைப்புத் துறையினர், வருவாய்த்துறையினர், பேரூராட்சி துறையினர் ஆகியோர் பங்கேற்று பொதுமக்கள் தெரிந்து விழிப்புணர்வு பெற்றிடும் வகையில் விளம்பரபதாகைள் மூலம் பேரிடர் காலங்களில் முன்னெச்சரிக்கையாக எவ்வாறு பாதுகாப்புடன் இருப்பது குறித்தும், மரங்கள் வளர்ப்பது குறித்தும், சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்தும் எடுத்துரைத்து சென்றனர். இப்பேரணி நகரின் முக்கிய விதியின் வழியாக சென்று நிறைவாக பேருந்து நிலையத்தை வந்தடைந்தது.
மேலூர் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் தெரிவிக்கையில், தற்பொழுது மழைக்காலம் துவங்கி உள்ளது, பொதுவாக கடந்த மாதம் அனைத்து பகுதிகளிலும் வரத்து கால்வாய், கண்மாய், குளங்கள், சீரமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது. இதன் மூலம் மழைக்காலங்களில் தண்ணீர் தேங்காமல் குளங்களுக்கும், கண்மாய்களுக்கும் செல்கின்ற வகையில் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதற்கேற்ப பொதுமக்களும் முன்கூட்டியே தாழ்வான பகுதியில் தண்ணீர் தேங்காமல் இருக்க உரிய பணிகளை மேற்கொள்ள அலுவலர்களுக்கு உறுதுணையாக இருந்து மழைக்காலங்களில் பாதுகாப்புடன் இருந்திட வேண்டும். அதேபோல் வரத்து கால்வாய் மற்றும் குளங்கள் போன்ற பகுதிகளில் அதிகளவில் மரங்கள் வளர்க்க வேண்டும். இதன் மூலம் மண் அரிப்பு ஏற்படாமல் கரைகள் மற்றும் கால்வாய் பகுதிகள் பாதுகாக்கப்படும். எனவே வரும் காலங்களில் அதிகளவு மரங்கள் வளர்த்து சுற்றுச்சூழலை பாதுகாத்திடவும், பேரிடர் காலங்களில் எவ்வித பாதிப்பும் இன்றி பாதுகாப்புடன் இருந்திட வேண்டுமென மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ஜானி டாம் வர்கீஸ், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் தொண்டி பேரூராட்சி தலைவர் திருமதி. ஷாஜகான்பானு அவர்கள், திருவாடனை வட்டாட்சியர் திரு.செந்தில்வேல்முருகன் அவர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்