இராமநாதபுரம் மாவட்டத்தில் ரூ.20 கோடி மதிப்பீட்டில் புதிய பேருந்து நிலையம் கட்டுவதற்கான பூமி பூஜையினை மாவட்ட ஆட்சித்தலைவர் விஷ்ணு சந்திரன், துவக்கி வைத்தார். இவ்விழாவில் இராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் காதர்பாட்ஷா முத்துராமலிங்கம் முன்னிலை வகித்தார்.
மாவட்ட ஆட்சியர் அறிக்கை
வளர்ந்து வரும் நகர் பகுதிகளில் இராமநாதபுரம் நகராட்சியும் இருந்து வருகிறது. அதிலும் குறிப்பாக பல்வேறு மாவட்டங்களிலிருந்து மக்கள் வந்து செல்லும் வகையில் மையப்பகுதியாக இராமநாதபுரம் இருப்பதால் இங்கு பெரிய அளவில் பேருந்து நிலையம் வேண்டும் என்ற கோரிக்கை மக்களிடையே இருந்து வந்தது.
அதனடிப்படையில் தற்போது நகராட்சி நிர்வாகம் மூலம் ரூ.20 கோடி நிதி ஒதுக்கீடு வழங்கி புதிய பேருந்து நிலையம் 16909.5 சதுரஅடி பரப்பில் கட்டுமான பணிகள் துவங்கியுள்ளது. இதன் மூலம் வெளி மாவட்டங்களான மதுரை, கோயமுத்தூர், திருச்சி, திருநெல்வேலி போன்ற மாவட்டங்களில் இருந்து இராமேஸ்வரம் போன்ற பகுதிகளுக்கு சென்று வர இப்பேருந்து நிலையம் பொதுமக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.
மாவட்ட ஆட்சியர் கோரிக்கை
இந்த கட்டுமான பணி முடித்திட ஓர் ஆண்டுக்கு இலக்கிடு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இருந்த போதிலும் பணிகள் விரைந்து முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு பயன்படுத்திட ஏதுவாக பணிகளை மேற்கொள்ள அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்நிகழ்ச்சியில் இராமநாதபுரம் நகர்மன்ற தலைவர் கார்மேகம், இராமநாதபுரம் நகராட்சி ஆணையாளர் அஜிதா பர்வீன், இராமநாதபுரம் நகர்மன்ற துணைத்தலைவர் பிரவீன் தங்கம் , மற்றும் நகர் மன்ற உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்