பரமக்குடியில் வைகை ஆற்றை தூய்மைப்படுத்தும் பணிகளை எம்.எல்.ஏ முருகேசன் தொடங்கி வைத்தார்.
பரமக்குடியில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு வைகை ஆற்றை தூய்மைப்படுத்தும் பணிகளை பரமக்குடி எம்.எல்.ஏ முருகேசன் தொடங்கி வைத்தார்.
மதுரை வைகையாற்றில் கள்ளழகர் இறங்கும் வைபவத்திற்கு அடுத்தபடியாக பரமக்குடியில் கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவம் வெகு விமர்சையாக நடைபெறும்.
பரமக்குடி வரதராஜ பெருமாள் கோவில் சித்திரை திருவிழா ஏப்ரல் 5 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 14 ஆம் தேதி திருக்கல்யாணமும், 15 ஆம் தேதி தேரோட்டமும், 16 ஆம் தேதி வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்கும் நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது.
கொரோனா காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக வைகையாற்றில் கள்ளழகர் இறங்கும் வைபவம் நடைபெறவில்லை.
இதனால், வைகை ஆறு முழுவதும் கருவேல மரங்கள், நாணல்கள் நிறைந்து காணப்படுகிறது. சித்திரைத் திருவிழாவை முன்னிட்டு பரமக்குடி நகராட்சி சார்பில் வைகை ஆற்றை தூய்மைப்படுத்தும் பணிகள் தொடங்கியுள்ளன.
வைகை ஆற்றின் ஆற்று பாலம் பகுதியில் இருந்து தரைப்பாலம் வரை சுமார் 2 கிலோமீட்டர் தூரத்திற்கு வைகை ஆற்றை தூய்மைப்படுத்தும் பணிகளை பரமக்குடி எம்.எல்.ஏ முருகேசன் தொடங்கிவைத்தார்.
நகர்மன்ற தலைவர் சேது.கருணாநிதி, நகர மன்ற துணைத் தலைவர் குணா, நகராட்சி ஆணையாளர் திருமால் செல்வம், நகராட்சி பொறியாளர் அய்யனார், வடக்கு நகர் செயலாளர் ஜீவரத்தினம் மற்றும் கவுன்சிலர்கள், நகராட்சி ஊழியர்கள் கலந்து கொண்டனர்.
இதையும் படியுங்கள் || சென்னை மாநகராட்சியில் 770 கோடி “நிதி பற்றாக்குறை”