பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு. இடையே பேச்சாற்றலையும், படைப்பாற்றலையும் வளர்க்கும் நோக்கில் ஆண்டுதோறும் மாவட்ட அளவில் கவிதை, கட்டுரை, பேச்சுப்போட்டிகள் தமிழ் வளர்ச்சித் துறையால் நடத்தப்பெற்று பரிசுகள் வழங்கப்பெற்று வருகின்றன.
அதனடிப்படையில் 11, 12ஆம் வகுப்பு பயிலும் பள்ளி மாணவர்கள் மற்றும் கல்லூரி மாணவர்களுக்கான கவிதை/கட்டுரை/பேச்சுப் போட்டிகள் 03.07.2023 அன்று இராமநாதபுரம் சுவாட்ஸ் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற உள்ளன.
இப்போட்டிகளில் கலந்து கொள்வதற்கான விதிமுறைகள்
- பள்ளி மாணாக்கர்களுக்கான போட்டிகளில் இராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள அனைத்து வகையான பள்ளிகளில் (அரசு, உதவிபெறும், தனியார்) 11 அல்லது 12ஆம் வகுப்பு பயிலும் மாணாக்கர்கள் மட்டுமே கலந்து கொள்ள வேண்டும். கல்லூரி மாணாக்கர்களுக்கான போட்டிகளில் இராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள அனைத்து வகையான கல்லுாரிகளில் அரசு, அரசு உதவிபெறும் மற்றும் தனியார் கலைக்கல்லூரிகள், மருத்துவக்கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகள், ஆசிரியர் பயிற்சிக் கல்லூரிகள், பல்தொழில் நுட்பக் கல்லூரிகள், செவிலியர் கல்லூரிகள் முதலியன) பயிலும் மாணாக்கர்கள் மட்டுமே கலந்து கொள்ள வேண்டும்.
- ஒவ்வொரு போட்டிக்கும் பள்ளி/கல்லூரிகளிலிருந்து ஒரு மாணாக்கர் வீதம், 3 போட்டிகளுக்கு 3 மாணாக்கர்கள் அனுப்பப்பெற வேண்டும். போட்டி நடைபெறும் நாளன்று காலை 9.30 மணிக்குள் வருகைதர வேண்டும். போட்டிகளுக்கான தலைப்புகள் பங்கேற்கும் மாணாக்கர்களுக்கு போட்டி நடைபெறும் நேரத்தில் தெரிவிக்கப்பெறும். போட்டிகளுக்கான தலைப்புகள் பெரும்பாலும் தமிழ்மொழி, தமிழ் இலக்கியம், தமிழ்நாடு குறித்த வகையில் அமையும். போட்டி முடிவுகள் போட்டி நடைபெறும் நாளன்றே தெரிவிக்கப்பெறும். போட்டிகள் ஒவ்வொன்றுக்கும் முறையே முதற்பரிசு ரூ.10,000/-உம், இரண்டாம் பரிசு ரூ.7,000/-உம், மூன்றாம் பரிசு ரூ.5,000/-உம் வழங்கப்பெறும்.
- போட்டிகளில் பங்கேற்கும் மாணாக்கர்கள் தாங்கள் பயிலும் பள்ளித் தலைமை ஆசிரியர்/கல்லூரி முதல்வரின் அனுமதிக் கடிதத்துடன் கலந்து கொள்ள வேண்டும். போட்டிகளில் வெற்றி பெற்ற மாணாக்கர்கள் கடவுச்சீட்டு அளவிலான 3 நிழற்படங்களை போட்டி நடைபெறும் நாளன்றே அளித்திட வேண்டும். போட்டிகளில் பங்கேற்கும் மாணாக்கர்களின் விவரங்கள் பள்ளி, கல்லூரி மூலமாக 27.06.2023-க்குள் இராமநாதபுரம் மாவட்டத் தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநர் அலுவலக மின்னஞ்சல் முகவரிக்கு ([email protected]) அனுப்பப்பெற வேண்டும்.
- இப்போட்டிகள் தொடர்பாக மேலும் விவரம் அறிய விரும்புவோர் மாவட்ட ஆட்சியரகத்தில் உள்ள தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநர் அலுவலகத்தில் நேரிலும், 04567-232130 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டும் தெரிந்து கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் விஷ்ணு சந்திரன்,தெரிவித்துள்ளார்.