ராமநாதபுரத்தில் கிராம ஊராட்சிகள் தொடர்பான ஆலோசனைக் கூட்டம்
இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் ஊரக் வளர்ச்சித்துறையின் மூலம் கிராம ஊராட்சியின் வளர்ச்சி குறித்து மேற்கொள்ள வேண்டிய பணிகள் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் ஜானி டாம் தலைமையில் நடைபெற்றது.
ஊராட்சி வளர்ச்சி திட்டம் குறித்து
இக்கூட்டத்தில் போகலூர், கடலாடி, கமுதி ஊராட்சிகளை சேர்ந்த ஊராட்சி மன்ற தலைவர்கள் முன்னிலையில் கிராம ஊராட்சி வளர்ச்சி திட்டம் குறித்து வடிவமைக்கப்பட்டுள்ள முக்கிய திட்டப்பணிகள் குறித்து ஆலோசனை மேற்கொண்டர்.
அடிப்படை வசதிகளான குடிநீர், சாலை வசதிகளை மேம்படுத்த திட்டங்களை திட்டமிட்டு செயல்படுத்த வேண்டும். அடிப்படை வசதிகள் மட்டும் இல்லாமல் அனைத்து துறை அலுவலர்களுடன் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். அதேபோல் அனைத்துறையினரும் ஊராட்சி மன்ற தலைவர்களுடன் ஆலோசனை மேற்கொண்டு ஊராட்சி மன்ற தலைவர்களுக்கு மக்களின் வளர்ச்சி திட்டங்களுக்கு உறுதுணையாக இருந்திட வேண்டும்.
முறையான பணி நடத்த
கலைஞரின் அனைத்து கிராம வளர்ச்சித் திட்டத்தின் கீழ் 5 ஆண்டுகளில் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும் பணிகள் நடைபெறும். அதேபோல் ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தின் கீழ் நடைபெறும் பணிகளையும் பொது நிதியில் இருந்து எடுக்கப்படும் வேலைகள் விரைந்து முடிக்க வேண்டும். அனைத்து ஊராட்சிகளிலும் உரிய முறையில் குடி தண்ணீரில் குளோரிநேசன் செய்யப்பட வேண்டும். பொதுமக்களுக்கு வழங்கப்படும் குடிநீர் அளவு கண்காணிக்க வாட்டர் மீட்டர் பொருத்தப் பட வேண்டும். 2023-24 கிராம வளர்ச்சி திட்டம் தயார்செய்யும் போது தண்ணீர் மேலாண்மை குறித்து முக்கியத்துவம் அளிக்க வேண்டும்.
தேவையற்றவையை அகற்ற நடவடிக்கை
கிராம ஊராட்சிகளில் பயன்பாடு அற்ற மின் இணைப்புகளை அகற்ற உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். பொது சுகாதாரத்துறையின் மூலம் அவ்வப்போது மருத்துவ முகாம்கள் அமைத்து பொதுமக்களுக்கு தேவையான மருத்துவ பரிசோதனைகளை மேற்கொண்டு தேவையான மருத்துவ உதவிகளை செய்திட வேண்டும். அதேபோல் மக்களை தேடி மருத்துவம் திட்டத்தில் தேவையான மருத்துவ உதவிகளை பெற்று வழங்கிட வேண்டும். பொதுவாக ஊராட்சியின் வளர்ச்சிக்கு திட்டமிட்டு செயல்பட்டு மக்களின் பொருளாதார வளர்ச்சிக்கு உங்கள் பணி மிக முக்கியமான ஒன்றாக திகழ்ந்திட வேண்டுமென மாவட்ட ஆட்சித்தலைவர் ஜானி டாம் தெரிவித்தார்.
இக்கூட்டத்தில் கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) பிரவீன் குமார், உதவி ஆட்சியர் (பயிற்சி) நாராயண சர்மா, ஊரக வளர்ச்சித்துறை செயற்பொறியாளர் சுந்தரேசன், மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.