ராமநாதபுரத்தில் மாவட்ட அளவிலான கலைத்திருவிழா
ராமநாதபுரம் நேஷனல் அகடாமி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் பள்ளி கல்வித்துறையின் மூலம் மாவட்ட அளவிலான கலை திருவிழா துவக்க விழா நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் ஜானி டாம் வர்கீஸ் தலைமையேற்று மாவட்ட அளவிலான கலை திருவிழா நிகழ்ச்சியை துவக்கி வைத்தார்.
சமுதாயத்தில் அங்கீகாரம்
பின்னர் பேசியதாவது, கலை விழா என்பது முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகும். கலை என்பது எளிதாக தானாக வந்து விடக்கூடிய ஒன்றல்ல. முழுமையான பயிற்சி இருந்தால் மட்டுமே கலையினை பெற்றுக் கொள்ள முடியும்.ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதத்தில் கலைத்திறன் இருக்கும். அதை அரங்கேற்றம் செய்யும் இடம் தான் பள்ளிக்கூடம் அத்தகைய பள்ளி படிப்பின்போது படிப்புடன் சேர்ந்து தங்களுக்கு விருப்பமுள்ள கலையை தேர்வு செய்து அதில் ஆர்வம் காட்ட வேண்டும். ஆர்வமுடன் கலையை கற்கும் பொழுது தங்கள் திறன் வெளிக்கொண்டு வருவது மட்டுமின்றி அதன் மூலம் சமுதாயத்தில் பெரிய அங்கீகாரம் கிடைக்கப் பெறுகின்றன.
கலைத் திருவிழா
பள்ளிக்கல்வித்துறையின் மூலம் தற்பொழுது இந்த கலைத் திருவிழாவிற்காக பங்கேற்க 33,000 மாணவ, மாணவிகள் பதிவு செய்துள்ளது என்பது மிக்க மகிழ்ச்சியை தருகின்றது. அதேபோல் வட்டார அளவில் 15,000 மாணவ, மாணவிகள் கலந்து கொள்ள ஆர்வம் காட்டி இருப்பது வரவேற்கிறேன். இதன் மூலம் ஒவ்வொரு மாணவ, மாணவியரிடமும் இலக்கியத்தை வளர்க்கக் கூடிய கனவு உருவாகியுள்ளது என்பது நன்றாக உணர முடிகின்றது.
கலைத்திறன்
இந்த கனவை நினைவாக்கும் விதமாக ஒவ்வொருவரும் படிக்கும் பொழுதே கலைக்கான திறனை வளர்த்துக் கொள்ள ஆர்வம் காட்டிட வேண்டும். பள்ளி தான் உங்களுக்கு மேடையாகும். ஒவ்வொரு கலை நிகழ்ச்சியிலும் பங்கேற்று தங்கள் திறனை வெளிப்படுத்த வேண்டும். முழுமையான பயிற்சியின் மூலம் தான் முழுமையாக கலைத்திறனை வெளிப்படுத்த முடியும்.
பள்ளிக்கு பெருமை
கலை என்பது ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒரு வகையில் உதவியாக இருந்திடும். எனவே இது போன்ற நிகழ்ச்சிகளில் அதிகளவு மாணவ, மாணவிகள் பங்கு கொண்டு தங்கள் கலைத்திறனை வெளிப்படுத்தி உங்களுக்கும், பள்ளிக்கும் பெருமை தேடித் தருவதுடன் தங்கள் திறனை சாதனையாக்கி பெருமை தேடி தர வேண்டுமென மாவட்ட ஆட்சித்தலைவர் ஜானி டாம் வர்கீஸ் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் கூடுதல் ஆட்சியர் பிரவீன் குமார், உதவி ஆட்சியர் (பயிற்சி) நாராயண சர்மா, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பாலு முத்து, மாவட்ட கல்வி அலுவலர் ரவி, மண்டபம் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் சுப்புலட்சுமி ஜீவானந்தம், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் கவிதா கதிரேசன், நேஷனல் அகடாமி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி தாளாளர் செய்யது அப்துல்லா, ஒருங்கிணைந்த பள்ளி கல்வி உதவி திட்ட அலுவலர்கள் செல்வராஜ், கண்ணன் மற்றும் ஆசிரியர்கள் பள்ளி மாணவ, மாணவிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.