இராமநாதபுரம் மாவட்ட விவசாயிகள் தேனீ வளர்த்து லட்ச ரூபாய் வருமானம்
கலெக்டர் – ஜானி டாம் வர்கீஸ் தகவல்
இராமநாதபுரம் ஊராட்சி ஒன்றியம் தெற்குதரவை கிராமத்தில் தோட்டக்கலை மற்றும் மலைப் பயிர்கள் துறை சார்பில் தேசிய தோட்டக்கலை இயக்கத்தின் கீழ் செயல் விளக்கத்திடலினை கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் ஆய்வு செய்தார்.
40 சதவீதம் – மானியம்
இராமநாதபுரம் மாவட்டத்தில் தேசிய தோட்டக்கலை இயக்கத் திட்டத்தின் மூலம் தேனீக்கள் வாயிலாக மகரந்த சேர்க்கையை அதிகரிக்கும் இனத்தின்கீழ் தேனீப்பெட்டி மற்றும் தேனீ பிழிந்து எடுக்கும் கருவி வாங்கும் விவசாயிகளுக்கு பின்னேற்பு மானியமாக 40 சதவீதம் வழங்கப்பட உள்ளது. தேனீப்பெட்டிகள் 150 எண்கள் வழங்க இலக்கு பெறப்பட்டுள்ளது .
தரிசு நில – பயிர்கள்
இத்திட்டத்தின் கீழ் பயன்பெற குறைந்த பட்சம் விவசாயிக்கு ஒரு ஏக்கர் நிலம் இருக்க வேண்டும். அவ்விவசாய நிலத்தில் பல்லாண்டு பயிர்கள் மா, கொய்யா போன்ற பழமரங்கள் மற்றும் முந்திரி போன்ற தரிசு நில பயிர்கள் அமைந்து இருக்க வேண்டும்.
அரசு மானியம் – 24,000
ஒரு விவசாயிக்கு குறைந்த பட்சமாக 10 தேனீப்பெட்டிகள் அதிகப்பட்சமாக 50 தேனீப்பெட்டிகள் மற்றும் ஒரு தேன் பிழிந்து எடுக்கும் கருவி வழங்கப்படும். 10 தேனீப்பெட்டிகள் மற்றும் ஒரு தேன் பிழிந்து எடுக்கும் கருவியின் மொத்த விலை 60,000. அதில் 40 சதவீதம் அரசு மானியமாக 24,000 மட்டும் வழங்கப்படுகிறது.
3.4 லட்சம் – வருமானம்
தேசிய தோட்டக்கலை இயக்கத் திட்டத்தின் கீழ் தெற்குத்தரவை கிராமத்தைச் சேர்ந்த பஞ்சவர்ணத்திற்கு 10 தேனி வளர்ப்பு பெட்டிகள் வழங்கப்பட்டது. நன்றாக பராமரித்து 400 எண்ணிக்கையிலான தேனீ வளர்ப்பு பெட்டிகளை வைத்துள்ளார். தேனீ வளர்ப்பு மற்றும் பாராமரிப்புக்காக 2.4 லட்சம் செலவு செய்துள்ளார். தேன் மகசூல் மூலம் 2.2 லட்சம் வருமானம் கிடைக்கப் பெற்றுள்ளார்.மேலும் 100 பெட்டிகளை அவர் விற்பனை செய்த மூலம் கிடைக்கப்பெற்ற வருமானம் 2.2 லட்சம் ஆகும். இத்திட்டத்தின் மூலம் இதுவரை 3.4 லட்சம் வருமானம் கிடைத்துள்ளது.