பரமக்குடி நரிக்குறவர் மக்களுக்கு விரைவில் இலவச வீட்டுமனை பட்டா
பரமக்குடி வைகை நகர், முருகன் கோவில் படித்துறை ஆகிய பகுதிகளில் சுமார் 30 ஆண்டுகளுக்கும் மேலாக 23 குடும்பத்தைச் சேர்ந்த நரிக்குறவர் மக்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் நரிக்குறவர் மக்கள் பயன்பெறும் வகையில் தமிழகத்தில் நல வாரியம் அமைத்து தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
கோரிக்கை
இந்நிலையில் பரமக்குடி தாசில்தார் தமிம்ராஜா நரிக்குறவர் மக்கள் வசிக்கும் இடத்திற்கு நேரடியாக சென்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது நரிக்குறவர் இன மக்கள் தங்களுக்கு குடும்ப அட்டை, ஆதார் அட்டை, இலவச வீட்டு மனை பட்டா, மாற்றுத்திறனாளிகள், முதியவர்களுக்கு மாதாந்திர உதவித்தொகை, இளைஞர்கள், பெண்களுக்கு தொழில் செய்ய கடனுதவி, புதிதாக குடியிருப்புகள் கட்டித்தர வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
நடவடிக்கை
பின்னர் தகுதியான நபர்களை கண்டறிந்து குடும்ப அட்டை, ஆதார் அட்டை, இலவச வீட்டு மனை பட்டா, மாற்றுத்திறனாளிகள், முதியவர்களுக்கு மாதாந்திர உதவித்தொகை, இளைஞர்கள், பெண்களுக்கு தொழில் செய்ய கடனுதவி, புதிதாக குடியிருப்புகள் கட்டித்தர நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார்.
இலவச வீட்டு மனை பட்டா
இந்நிலையில் பரமக்குடி அருகே உள்ள பாம்பு விழுந்தான் கிராமத்தில் வருவாய் துறைக்கு சொந்தமான இடத்தில் குடிசைகள் அமைத்து தற்காலிகமாக தங்க வைக்கப்பட்டுள்ளனர். மேலும் மூன்று வேளை உணவும் வழங்கப்பட்டு வருகிறது. இன்னும் சில தினங்களில் இலவச வீட்டு மனை பட்டா வழங்கப்பட உள்ளது என பரமக்குடி தாசில்தார் தமிம்ராஜா தெரிவித்துள்ளார்.