சிவகங்கையில் ரூ. 41.65 லட்சம் நலத் திட்ட உதவிகள் அளிப்பு
சிவகங்கையில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறை தீர்க்கும் முகாமில் பயனாளிகளுக்கு ரூ. 41 லட்சத்து 65 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் பி. மதுசூதன் ரெட்டி வழங்கினார்.
சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் நடை பெற்ற மக்கள் குறை தீர்க்கும் முகாமுக்கு மாவட்ட ஆட்சியர் பி.மதுசூதன் ரெட்டி தலைமை வகித்தார். இம்முகாமில் பொதுமக்களிடமிருந்து 318 மனுக்கள் பெறப்பட்டு, சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள்கோரிக்கை மனுக்களுக்கு விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு ஆட்சியர் உத்தரவு பிறப்பித்தார்.
அதைத் தொடர்ந்து, கூட்டுறவுத் துறை சார்பில் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ. 9 லட்சத்து 60 ஆயிரம் கடனுதவி, சமூக பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் மாதாந்திர உதவித்தொகை, கால்நடை பராமரிப்புத் துறை சார்பில் கால்நடை பராமரிப்புக்கு ரூ. 28 ஆயிரம் கடனுதவி என மொத்தம் 66 பயனாளிகளுக்கு பல்வேறு துறை சார்பில் ரூ. 41 லட்சத்து 65 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை ஆட்சியர் வழங்கினார்.
இந்த முகாமில் சிவகங்கை மாவட்ட வருவாய் அலுவலர் ப.மணிவண்ணன், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்க இணை இயக்குநர் க. வானதி, சமூகப்பாதுகாப்பு தனித்துணை ஆட்சியர் மு.காமாட்சி, மாவட்ட வழங்கல் அலுவலர் சி.ரெத்தினவேல் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.