பரமக்குடி அரசு கல்லூரியில் கௌரவ விரிவுரையாளர்கள் வகுப்பை புறக்கணித்து காலவரையற்ற போராட்டம்
பரமக்குடி அரசு கலைக் கல்லூரியில் 66 க்கு மேற்பட்ட கௌரவ விரிவுரையாளர்கள் 15 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி வருகின்றனர். தற்போது தமிழக உயர்கல்வித்துறை சார்பாக அரசாணை 246, 247, 248 வெளியிட்டுள்ளனர். இதில் எழுத்து தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலமாக உதவி பேராசிரியர்களை நியமனம் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
15 ஆண்டுகள் – பணி பாதுகாப்பு
இதனால், கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி வரும் கௌரவ விரிவுரையாளர்கள் பணி பாதுகாப்பு இல்லாத சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். கடந்த அ.தி.மு.க ஆட்சியில் டி.ஆர்.பி மூலம் நேர்முகத் தேர்வு மற்றும் பணிஅனுபம் மூலம் 2391 உதவி பேராசிரியர்கள் நியமனம் செய்ய குறிப்பானை வெளியிடப்பட்டு விண்ணப்பங்கள் பெறப்பட்டனர். அதனைத் தொடர்ந்து, கௌரவ விரிவுரையாளர்களை பணி நிரந்தரம் செய்வதற்கு அரசாணை 56 வெளியிட்டு அதன் மூலம் சான்றிதழ் சரிபார்ப்பு முடிந்தது.
புதிய அரசாணை
இந்த நிலையில், அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக டி.ஆர்.பி குறிப்பாக 56 அரசானையை ரத்து செய்துவிட்டு, கௌரவ விரிவுரையாளர்களை பலி வாங்கும் விதமாக புதிய அரசாணைகளை வெளியிட்டுள்ளது. இதனால், பணி பாதுகாப்பு இல்லாத நிலையில் கௌரவ விரிவுரையாளர்கள் பணியாற்றி வருகின்றனர். புதிய அரசாணையை ரத்து செய்து பழைய அரசாணைகளின் படி உதவி பேராசிரியர்களை பணி நியமனம் செய்ய வேண்டும் எனக் கூறி வகுப்புகளை புறக்கணித்து தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.