பரமக்குடி சித்திரை திருவிழாவில் கள்ளழகர் சுந்தரராஜ பெருமாள் கோயிலுக்கு சென்றடைந்தார்.
பரமக்குடி ஸ்ரீ சுந்தரராஜப் பெருமாள் கோவிலின் சித்திரைத் திருவிழா, கடந்த 11 -ம் தேதி காப்புக் கட்டுடன் தொடங்கியது.
கடந்த ஏப்ரல் 14 ஆம் தேதி பூப் பல்லக்கில் சுந்தரராஜப் பெருமாள் நீலக்கலர் பட்டுத்தி கள்ளழகர் திருக்கோலத்துடன் வைகையாற்றில் இறங்கினார்.
வைகையாற்றில் எழுந்தருளிய கள்ளழகர் பல்வேறு மண்டகப் படிகளுக்குச் சென்று பக்தர்களுக்கு காட்சியளித்தார். பின்பு, மேலச்சத்திரத்தில் அமைந்துள்ள தல்லாகுளம் மண்டகப்படியில் கள்ளழகர் கோலத்தில் குதிரை வாகனத்தில் எழுந்தருளினார்.
தொடர்ந்து பல்வேறு மண்டகப் படிகளில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்த பெருமாள், வண்டியூர் என்னும் காக்காத் தோப்பு மண்டகப் படிக்கு சென்றடைந்தார்.
அதனை தொடர்ந்து வைகையாற்றில் அமைந்துள்ள வாணிய உறவின் முறையார் மண்டகப் படியில் எழுந்தருளும் பெருமாளுக்கு விடிய விடிய தசாவதார நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
பின்பு பல்வேறு மண்டகப் படிகளில் சென்று பெருமாள் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
நேற்று பரமக்குடி ஸ்ரீ சுந்தரராஜப் பெருமாள் மீண்டும் கள்ளழகர் திருக்கோலத்துடன் வண்ண மலர்களால் அலங்கரிக்கப் பட்ட பூ பல்லக்கில் நகருக்குள் எழுந்தருளி முக்கிய வீதிகளில் வலம் வந்து நேற்று மாலை கள்ளழகர் சுந்தரராஜபெருமாள் கோவிலை சென்றடைந்தார்.
அதனைத் தொடர்ந்து கண்ணாடி சேவை நடைபெற்றது. இத்திருவிழா ஏற்பாடுகளை சுந்தரராஜ பெருமாள் கோயில் மேனேஜிங் டிரஸ்டி நாகநாதன் தலைமையில் பாலமுருகன், நாகநாதன்,கோவிந்தன், முரளிதரன் ஆகிய டிரஸ்டிகள் செய்தனர்.