ராமநாதபுரம் மாவட்டம் கமுதியில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் நினைவிடத்தில் உள்ள கோவிலில் கும்பாபிஷேகம் முடிந்து மண்டல பூஜை நடைபெற்றது.
48-வது மண்டல பூஜை
கமுதி அடுத்த பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் நினைவிடத்தில் தேவர் சிலை, முருகன் கோவில், விநாயகர் கோவிலில் கடந்த 28-ந்தேதி கும்பாபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து 48 நாட்கள் தேவர், முருகன், விநாயகர் சிலைகளுக்கு சிறப்பு அபிஷேகம் அலங்கார பூஜைகள் நடைபெற்றன.
இந்த நிலையில் 48-வது மண்டல பூஜை தேவர் நினைவிடத்தில் பொறுப்பாளர் காந்திமீனாள் நடராஜன், தங்கவேல், பழனி ஆகியோர் தலைமையில் பிள்ளையார்பட்டி பிச்சை குருக்கள் குழுவினரால் நடத்தப்பட்டது. யாக சாலை பூஜை நடத்தப்பட்டு தேவர், முருகன், விநாயகர் சிலைகளுக்கு 22 வகையான அபிஷேகங்கள் நடைபெற்றன.
வெள்ளி கவசம்
இந்த சிறப்பு பூஜையில் தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அளித்த வெள்ளி கவசத்தினை பசும்பொன் முத்துராமலிங்க தேவர் சிலைக்கு அணிவித்தனர்.
பின்னர் முன்னாள் முதல்-அமைச்சர் பன்னீர்செல்வத்தின் மகன் ஜெயபிரதீப், ராஜ்யசபா எம்.பி தர்மர் ஆகியோர் முன்னிலையில் தேவர் சிலைக்கு வெள்ளி கவசம் அணிவிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர்கள் கோவிலாங்குளம் அழகு சரவணன், வக்கீல் முத்துராமலிங்கம், கரிசல் புலி வாசுதேவன், மாவட்ட மகளிர் அணி செயலாளர் சக்தி, வழிவிட்டாள் நகரச் செயலாளர் சதீஷ்குமார் ஆகியோர் பங்கேற்றனர்.