இராமநாதபுரம் மாவட்ட பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை பணியாளர்கள் கூட்டுறவு சிக்கன நாணய சங்கத்தில் கோடிக்கணக்கில் முறைகேடு.
மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுப்பாரா
இராமநாதபுரம் மாவட்ட பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை பணியாளர்கள் கூட்டுறவு சிக்கன நாணய சங்கம் பரமக்குடியில் உள்ள சின்னக் கடைத் தெருவில் இயங்கி வருகிறது.
இதில் திருவாடனை, முதுகுளத்தூர், கமுதி, ராமநாதபுரம், சாயல்குடி, பரமக்குடி ஆகிய சப் டிவிஷன்களை சேர்ந்த 300க்கு மேற்பட்ட பணியாளர்கள் இந்த சங்கத்தில் உறுப்பினர்களாக இருந்து கடனுதவி பெற்று வருகின்றனர்.
இந்தச் சங்கத்தில் பொதுப்பணித்துறை சேர்ந்த சாலை ஆய்வாளர், சாலைப் பணியாளர்கள், டிரைவர்கள், ரெக்கார்டு கிளர்க் உட்பட பல்வேறு பணிகளை சேர்ந்தவர்கள் இந்த சங்கத்தில் உள்ளனர்.
இந்த சங்கத்தில் கடந்த 2012ஆம் ஆண்டு முதல் சங்க உறுப்பினர்கள் பலருக்கு 3 லட்சம் முதல் 5 லட்சம் வரை கடன் உதவி வழங்கப்பட்டு உள்ளது.
இதில் சங்க உறுப்பினர்கள் மூன்று லட்ச ரூபாய் கடன் உதவி கேட்டால் ஐந்து லட்ச ரூபாய் கடனாக கொடுத்து விடுவார்.
பின்னர் உங்களுக்கு வேண்டியது 3 லட்சம் ரூபாய் கடன் என்றும், மீதமுள்ள 2 லட்ச ரூபாய் எதற்கு என்று கேட்டு அந்த இரண்டு லட்ச ரூபாயை இவர்களிடமிருந்து திரும்பப் பெற்று விடுவர்.
திரும்பப் பெற்ற தொகைக்கு ரசீது எதுவும் கொடுப்பதும் இல்லை. கேட்டால் முறையான பதிலும் சொல்வதில்லை. அதே போல் சங்கத்தில் கடன் பெறுபவர்கள் கடன் தொகைக்கு 10 சதவீத பங்கு தொகையை கட்ட வேண்டும்.
கடனை திருப்பிச் செலுத்திய பின்பு வாங்கிய பங்கு தொகையை திருப்பிக் கொடுக்க வேண்டும். ஆனால் திருப்பி கொடுக்காமல் சங்கத்தில் காலம் தாழ்த்தி வருகின்றனர்.
சங்க உறுப்பினர்கள் கடன் பெற்று கூடுதலாக கொடுத்த கடன் தொகையை திரும்ப கட்டிய பிறகு, கூட்டுச்சேர்ந்து பிரித்து கொள்வதாக சங்க உறுப்பினர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
சங்கத்தில் நடக்கும் முறைகேடுகள் குறித்து பலமுறை சங்கத்திற்கு சென்று சங்க உறுப்பினர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து கேட்டால் நீங்கள் கடன் பெற்ற தொகையை முழுவதுமாக செலுத்தி விட்டால் தான் நாங்கள் இது சம்பந்தமாக மேலதிகாரிகளுக்கு தகவல் சொல்லி தீர்த்து வைப்போம் என்று சொல்லி வருகின்றனர்.
அதேபோல் ஆண்டிற்கு ஒருமுறை சங்கத்தில் ஆடிட் செய்வது வழக்கம். அப்படி ஆடிட் செய்திருந்தால் இது போன்ற முறைகேடுகளை அன்றைய காலகட்டத்திலேயே கண்டுபிடித்திருக்கலாம்.
இதற்கு சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளும் உடந்தையாக இருந்து வருவதாக தெரிய வருகிறது.
இந்த சங்க முறைகேடு சம்பந்தமாக விசாரிக்க விசாரணை அதிகாரி 81 சட்ட விதியின் படி விசாரணை செய்ய வேண்டும்.
ஆனால் விசாரணை அதிகாரி ஆறு மாதத்திற்கு ஒருமுறை மாற்றப்படுவதால் இந்த விசாரணை முழுமையாக இன்றுவரை நடைபெறவில்லை.
இந்த முறைகேடு சம்பந்தமாக எந்த ஒரு அதிகாரியும் எங்களுக்கு முறையாக சம்மன் அனுப்பி விசாரணை செய்யவில்லை என குற்றம் சாட்டுகின்றனர்.
இது குறித்து சங்க உறுப்பினர் கூறியதாவது, “இதனால் சங்கத்தில் கடன் பெற்ற உறுப்பினர்கள் யாரும் முறையாக ஓய்வு பெற முடியவில்லை.
அதேபோல் எங்கள் மகன், மகளின் படிப்பு மற்றும் கல்யாணம் செய்ய முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். அதுமட்டுமன்றி கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாகி குடும்பத்தோடு சாவதை தவிர வேறு வழியின்றி தவித்து வருகிறோம்.” என்றார்.
இது குறித்து சங்கத் தலைவர் கோதண்டம் கூறியதாவது,”நான் இந்த சங்கத்திற்கு தலைவராக வந்து ஒன்றரை ஆண்டுகள் மட்டுமே ஆகிறது.
நான் பதவியேற்ற இந்த காலகட்டத்தில் இது போன்ற தவறுகள் எதுவும் நடக்கவில்லை. கடந்த 2015 ஆம் ஆண்டிலிருந்து கடந்த 4 ஆண்டுகளாக இது போன்ற தவறுகள் நடந்திருப்பதாக விசாரணையில் தெரிய வருகிறது.
அலுவலக உதவியாளர் மணிகண்டன் தான் நாங்கள் இல்லாத நேரத்தில் சங்க உறுப்பினர்களை வரவைத்து இதுபோன்ற தவறுகளை செய்து இருப்பதாக தெரிய வருகிறது.
அலுவலக உதவியாளர் மணிகண்டன் பெயரில் உள்ள சொத்துகள் எவை எவை என்பதை கண்டறிந்து அந்த சொத்துக்களை முடக்கவும். அதேபோல் அவரது வங்கி கணக்கை முடக்கவும் நடவடிக்கை எடுத்து வருகிறோம்.” என்றார்.
இதுகுறித்து சங்க செயலாளர் லோகநாதன் கூறியதாவது, “நான் சங்கத்தின் செயலாளராக இருந்த காலகட்டத்தில் அலுவலக உதவியாளராக மணிகண்டன் வேலை பார்த்து வந்தார்.
இவரை நம்பி சங்க உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் கடன் தொகைக்கான ஆர்டர் காப்பி மற்றும் வங்கிக் காசோலைகளை இவர் மூலம் கொடுத்து வங்கிக்கு அனுப்பி வைப்பேன்.
நான் கொடுத்த ஆடர் காபியில் உள்ள உறுப்பினர்களின் வங்கிக் கணக்கிற்கு பதிலாக அதே பெயரில் உள்ளவர்களின் வங்கிக் கணக்கை போலியாக தயார் செய்து அவர்களது வங்கி கணக்கில் வரவு வைத்து மணிகண்டன் மோசடியில் ஈடுபட்டது தற்போது தான் எனக்கு தெரிய வருகிறது.
இது சம்பந்தமாக மணிகண்டனை விசாரணை செய்ததிலிருந்து மணிகண்டன் தலைமறைவாக இருந்து வந்தார். வங்கியில் உள்ள ரெக்கார்டுகளை ஆய்வுசெய்ய தேடிப் பார்த்தபோது வங்கியில் எந்த ரெக்கார்டும் இல்லை.
இந்த ரெக்கார்டுகளை மணிகண்டன் தான் திருடிச்சென்று வைத்திருக்க வேண்டும்.” என்றார்.
இந்த சங்கத்தில் 100 உறுப்பினர்களுக்கு மேல் பாதிக்கப்பட்டு பல கோடி ரூபாய் ஊழல் நடந்து இருப்பதால் இதை சி.பி.சி.ஐ.டி விசாரணை செய்ய வேண்டும் என சங்க உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.