தனுஷும் செல்வராகவனும் மீண்டும் இணைந்து பணியாற்ற உள்ளனர்.
அவர்கள் இருவரும் அடுத்ததாக இணைய உள்ள படம் ஆயிரத்தில் ஒருவன் 2-ம் பாகம். இப்படம் குறித்த அறிவிப்பு கடந்த ஆண்டே வெளியானது. இப்படத்தை 2024-ம் ஆண்டு ரிலீஸ் செய்ய உள்ளதாகவும் அறிவித்திருந்தனர். அத்துடன் படத்தின் போஸ்டர் ஒன்றையும் படக்குழு வெளியிட்டு இருந்தது.
ஆயிரத்தில் ஒருவன் படத்தில் தனுஷ் நாயகனாக நடிக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளதால், அவர் எந்த கேரக்டரில் நடிப்பார் என்கிற எதிர்பார்ப்பு அதிகரித்து உள்ளது. இந்நிலையில், ஆயிரத்தில் ஒருவன் முதல் பாகத்தில் சோழ மன்னராக நடித்த பார்த்திபன், அப்படத்தின் இரண்டாம் பாகம் குறித்த முக்கிய அப்டேட்டை வெளியிட்டு உள்ளார்.
அதன்படி சமீபத்திய பேட்டியில் அவர் கூறியதாவது : “ஆயிரத்தில் ஒருவன் இரண்டாம் பாகத்தில் எனக்கு பதில் அந்த ரோலில் தனுஷ் நடிப்பார். முதல் பாகத்திலேயே அவர் நடிப்பதாக இருந்தது. அவருக்கு பதில் தான் நான் நடித்திருந்தேன். தற்போது இரண்டாம் பாகத்தில் எனக்கு பதில் தனுஷ் நடிப்பார். அவர் நடித்தாலும் சிறப்பாக இருக்கும்” என பார்த்திபன் கூறி உள்ளார்.