பரமக்குடி அருகே உள்ள கமுதக்குடியில் செயல்படும் மத்திய அரசின் நூற்பாலைக்கு மின்கம்பங்கள் நடுவதற்கு கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் மின்வாரிய அதிகாரிகள் திரும்பிச் சென்றனர்.
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே கமுதக்குடியில் மத்திய அரசின் நூற்பாலை செயல்பட்டு வருகிறது. கொரோனா காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக ஆலை செயல்படவில்லை. இதனால் உயர் மின்னழுத்த சப்ளைக்கு பதிலாக குறைந்த மின்னழுத்த சப்ளைகோரி ஆலை சார்பாக விண்ணப்பித்தனர். இதனை அடுத்து மின் விநியோகம் வழங்குவதற்கு கமுதக்குடி கிராமத்தில் மின்கம்பங்கள் நடுவதற்கு இன்று மின்வாரிய ஊழியர்கள், அதிகாரிகள் வந்துள்ளனர்.

அப்போது மின்வாரிய அதிகாரிகள் தேர்வு செய்த இடத்தில் குடிநீர் பைப்புகள் அதிகளவில் செல்வதால், சாலை குறுகலாக இருப்பதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்படும் எனவே மின்கம்பங்கள் நடுவதற்கு கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். 50க்கும் மேற்பட்டோர் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். எதிர்ப்பு அதிக அளவில் இருந்ததால் தற்காலிகமாக பணிகளை நிறுத்திக் கொண்டு மின்வாரிய அதிகாரிகள் திரும்பி சென்றனர்.