போகலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஊராட்சி ஒன்றிய குழு கூட்டம்
போகலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் போகலூர் ஊராட்சி ஒன்றிய குழு கூட்டம் தலைவர் சத்யா குணசேகரன் தலைமையில் நடந்தது. துணைத் தலைவர் வக்கில் பூமிநாதன் முன்னிலை வகித்தார். ஆணையாளர் சிவசாமி வரவேற்றார்.
காவிரி கூட்டுக் குடிநீர்
கூட்டத்தில் துணைத் தலைவர் பூமிநாதன் பேசுகையில், அரியகுடி, முத்துசெல்லாபுரம், அ. புத்தூர், முஸ்லிம் குடியிருப்பு உட்பட பல்வேறு பகுதிகளில் கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக காவிரி கூட்டுக் குடிநீர் வரவில்லை. இதனால் அப்பகுதி மக்கள் குடிநீருக்காக மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். இதனால் விசேஷ நிகழ்ச்சிகளுக்கு கூட நாங்கள் ஊர்களுக்குள் நுழைய முடியவில்லை என்றார்.
அதற்கு பதில் அளித்து பேசிய காவிரி கூட்டுக் குடிநீர் திட்ட உதவி பொறியாளர், சாலை அமைக்கும் பணியின் போது காவிரி குடிநீர் குழாய் உடைந்து உள்ளது. அதை சீரமைப்பதற்காக டெண்டர் விடப்பட்டு முடியும் நிலையில் உள்ளது. கூடிய விரைவில் அது சரி செய்யப்படும் என்றார்.
தலைவர் சத்யா குணசேகரன் பேசுகையில்,
15வது நிதி குழு மூலம் ரூ.49 லட்சம் மதிப்பீட்டில் அத்தியாவசிய பணிகள் நடைபெற உள்ளது. யூனியன் கூட்டத்திற்கு பள்ளி கல்வித்துறை, மின்வாரிய துறையில் இருந்து அதிகாரிகள் வருவது கிடையாது. பலமுறை அவர்களை வலியுறுத்தியும் அலட்சியமாக உள்ளனர். ஆகவே அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க மாவட்ட கலெக்டருக்கு பரிந்துரை செய்ய வேண்டும் என்று கூறினார்.
கவுன்சிலர் காளிதாஸ் பேசுகையில்,
உரத்தூர் முதல் எஸ்.கொடிக்குளம் செல்லும் சாலை, அனுமனேரி முதல் கோரைக் குளம் செல்லும் சாலை மிகவும் சேதம் அடைந்துள்ளது. இதனால் பள்ளி மாணவர்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். இருசக்கர வாகன ஓட்டுனர்களும் அவதிப்படுகின்றனர். ஆகவே அந்த சாலையை சீரமைத்து கொடுக்க வேண்டும். என்றார். இந்த கூட்டத்தில் ஒன்றிய கவுன்சிலர்கள் தேன்மொழி, முருகேஸ்வரி, காளிஸ்வரி ஆகியோர் கலந்து கொண்டனர், மேலாளர் ராமநாதன் நன்றி கூறினார்.