இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட ஆட்சித்தலைவர் விஷ்ணு சந்திரன், தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பொதுமக்களிடம் பல்வேறு கோரிக்கைகள் குறித்த 317 மனுக்கள் பெற்று மனுதாரரின் முன்னிலையில் மனுக்களை விசாரணை செய்து தொடர்புடைய அலுவலர்களிடம் மனுக்களை வழங்கி உரிய நடவடிக்கையினை விரைந்து மேற்கொள்ள அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவிக்கையில்,
ஒவ்வொரு வாரமும் பொதுமக்களிடம் பெறக்கூடிய மனுக்களுக்கு உரிய நடவடிக்கை மேற்கொண்டு ஒருமாத காலத்திற்குள் மனுதாரர்களுக்கு உரிய தீர்வு வழங்கிட வேண்டும் எனவும், தீர்வு வழங்க முடியாத மனுக்கள் நிலை குறித்து மனுதாரர்களிடம் அலுவலர்கள் எடுத்துரைக்க வேண்டும் எனவும் அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
இக்கூட்டத்தில் வீட்டுமனை பட்டா, முதியோர் உதவித்தொகை, தனிநபர் வீடு வழங்கும் திட்டம், குடிநீர் இணைப்பு வழங்குதல் உள்ளிட்டவை தொடர்பாக பொதுமக்கள் மனுக்களை அளித்தனர். மேலும் பொதுமக்கள் வழங்கும் மனுக்களுக்கு துறைசார்ந்த அலுவலர்கள் சிறப்பு கவனம் எடுத்து செயல்பட வேண்டுமென மாவட்ட ஆட்சித்தலைவர் விஷ்ணு சந்திரன், தெரிவித்தார்.
பேச்சு போட்டியில் வெற்றி பெற்ற மாணவனுக்கு பாராட்டு
அதனைத் தொடர்ந்து ஊரக வளர்ச்சித்துறையின் மூலம் கருணை அடிப்படையில் இரண்டு நபர்களுக்கு இளநிலை உதவியாளர்களுக்கான பணி நியமன ஆணைகளை வழங்கியும், தொடர்ந்து தமிழ் வளர்ச்சித்துறையின் மூலம் மாநில அளவில் நடைபெற்ற பேச்சு போட்டியில் திருவாடனை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர் நவீன்குமார் முதலிடம் பெற்றமைக்காக பாராட்டு சான்று மற்றும் நினைவு பரிசு வழங்கி மாவட்ட ஆட்சித்தலைவர் விஷ்ணு சந்திரன், பாராட்டினார்.
இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் கோவிந்தராஜலு , ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர்(பொ) அபிதா ஹனிப் , மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) (பொ) மாரிச்செல்வி மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.