ராமநாதபுரத்தில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்
மக்கள் குறைதீர்க்கும் நாள் நிகழ்ச்சியில் 6 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி பொதுமக்களிடம் 291 மனுக்கள் பெற்று மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் ஜானி டாம் வர்கீஸ் உத்தரவிட்டுள்ளார்
மனு அளித்த பொதுமக்கள்
இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட ஆட்சித்தலைவர் ஜானி டாம் வர்கீஸ் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் பொதுமக்களிடம் கோரிக்கையில் குறித்த மனுக்கள் பெற்று மனுதாரரின் முன்னிலையில் மனுக்களை விசாரணை செய்து தொடர்புடைய அலுவலர்களிடம் மனுக்களை வழங்கி உரிய நடவடிக்கையினை விரைந்து மேற்கொள்ள அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் உத்தரவிட்டார்.
மேலும் பெறப்பட்ட மனுக்களில் வீட்டுமனை பட்டா, முதியோர் உதவித்தொகை, தனி நபர் வீடு வழங்கும் திட்டம், பட்டா பெயர் மாற்றம், குடும்ப பிரச்சனைகள் தீர்த்து வைத்தல் குறித்த மனுக்களே அதிகளவு வரப்பெற்றன.
குறைதீர்க்கும் கூட்டம்
மாவட்ட ஆட்சித்தலைவர் கூறியதாவது ஒவ்வொரு வாரமும் பொதுமக்களிடம் பெறக்கூடிய மனுக்களுக்கு உரிய நடவடிக்கை மேற்கொண்டு ஒரு மாத காலத்திற்குள் மனுதாரர்களுக்கு உரிய தீர்வு வழங்கிட வேண்டும். தீர்வு வழங்க முடியாத மனுக்கள் குறித்து மனுதாரர்களிடம் உரிய காரணம் குறித்து எடுத்துரைக்க வேண்டும். அப்பொழுது தான் அது போன்ற மனுக்கள் திரும்பத் திரும்ப வராது எனவே பொதுமக்கள் வழங்கும் மனுக்களுக்கு துறை அலுவலர்கள் சிறப்பு கவனம் எடுத்து செயல்பட வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் ஜானி டாம் வர்கீஸ் தெரிவித்தார்.
தொடர்ந்து ஆதிதிராவிடர் நலத்துறையின் மூலம் வன்கொடுமையால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த 5 நபர்களின் குடும்ப வாரிசுதாரர்களுக்கு பணி நியமன ஆணை, வருவாய் துறையின் மூலம் 1 நபருக்கு மாதந்திர உதவித்தொகைக்கான ஆணையினை மாவட்ட ஆட்சித்தலைவர் ஜானி டாம் வர்கீஸ் வழங்கினார்.
முக்கிய அலுவலர்கள் பங்கேற்றனர்
இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் காமாட்சி கணேசன், மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலர் அன்னம்மாள், மாவட்ட ஆட்சியரின் கூடுதல் நேர்முக உதவியாளர் (நிலம்) குணசேகரன் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.