ராமேசுவரம் மீனவர்கள் இலங்கைக் கடற்படை தாக்குதல்!பா.ம.க தலைவர் கண்டனம்
ராமேசுவரத்திலிருந்து சனிக்கிழமை மீன்பிடிக்கச் சென்ற மீனவர்கள் மீது இலங்கைக் கடற்படையினர் தாக்குதல் நடத்தினர்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் ராமேசுவரத்திலிருந்து 500 -க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் 3,500 -க்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன் வளத்துறை அனுமதி பெற்று மீன்பிடிக்கச்சென்றனர்.
சனிக்கிழமை நள்ளிரவு கச்சத்தீவு நெடுந்தீவு இடையே மீன்பிடிக்க சென்ற மீனவர்கள் மீது, அங்கு வந்த இலங்கைக் கடற்படையினர் புட்டிகள் மற்றும் கற்களைக் கொண்டு தாக்குதல் நடத்தி மீனவர்களை மீன் பிடிக்கவிடாமல் விரட்டியடித்தனர்.
“படகு ஒன்றுக்கு ரூ.40 ஆயிரம் வரை செலவு செய்து மீன்பிடிக்கச் சென்றோம். இலங்கைக் கடற்படையினரின் தாக்குதலால், படகு ஒன்றுக்கு ரூ.20 ஆயிரம் வரை இழப்பு ஏற்பட்டது’ என கரை திரும்பிய மீனவர்கள் தெரிவித்தனர்.
பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் கண்டனம்
வங்கக்கடலில் கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் மீது இலங்கைக் கடற்படையினர் கல்வீசித் தாக்குதல் நடத்தியுள்ளனர். பத்துக்கும் மேற்பட்ட படகுகளில் இருந்த மீன்பிடி கருவிகளை சேதப்படுத்தி, மீன்வர்களை விரட்டியடித்துள்ளனர். இது கடுமையாக கண்டிக்கத்தக்கது.
தமிழக மீனவர்களை கைது செய்து சிறையில் அடைப்பது, மீனவர்களின்படகுகளை சேதப்படுத்தி மூழ்கடிப்பது, கல் வீசித் தாக்குதல் நடத்தி மீனவர்களை விரட்டியடிப்பது, மீன்களை கொள்ளையடிப்பது என தமிழக மீனவர்கள் மீதான இலங்கைக் கடற்படையினரின் அத்துமீறல்கள் தொடர்கின்றன. பாமக உள்ளிட்ட கட்சிகளும், மாநில அரசும் கண்டித்தும் கூட இலங்கை படையினர் அத்துமீறலை நிறுத்திக் கொள்வதாக தெரியவில்லை. இது இந்தியாவுக்கு விடப்பட்டசவால்.
வங்கக்கடலில் மீன்பிடிக்கச் செல்லும் தமிழக மீனவர்கள் அச்சமின்றி மீன்பிடிப்பதை மத்திய, மாநில அரசுகள் உறுதி செய்ய வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.