ராமநாதபுரத்தில் மகளிர் சுய உதவிக் குழுக்கள் மூலம் உற்பத்தி செய்த கீரை விற்பனை
ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் ஊரக வாழ்வாதார இயக்கம் மூலம் திருப்புல்லாணி ஊராட்சி ஒன்றியம், தாதனேந்தல் ஊராட்சியில் உள்ள மகளிர் சுய உதவிக் குழுக்கள் பண்ணை விவசாயம் மூலம் உற்பத்தி செய்த கீரை வகைகளை பொதுமக்களிடம் விற்பனையை மாவட்ட ஆட்சித்தலைவர் ஜானி டாம் வர்கீஸ் துவக்கி வைத்து மகளிர் குழுவினை பாராட்டி இக்குழுவில் செயல்பாடுகள் குறித்து கேட்டார்.
இணைந்த கைகள் – மகளிர் குழு
பின்னர் தாதனேந்தல் ஊராட்சியை சேர்ந்த இணைந்த கைகள் மகளிர் குழுவினர் தெரிவிக்கையில், தாதனேந்தல் ஊராட்சியில் 20 மகளிர்கள் சேர்ந்து இணைந்த கைகள் என்ற மகளிர் குழு துவங்கி தனிநபர் பொருளாதார முன்னேற்றம் பெறும் வகையில் சுய தொழில் துவங்க திட்டமிட்டோம்.
தேவைக்கு ஏற்ப – விற்பனை
அதன்படி இக்குழுவில் உள்ள உறுப்பினர்கள் தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் பணிகள் வழங்கும் பொழுது பணிக்குச் சென்று வந்து பணி இல்லாத நேரங்களில் குழு உறுப்பினர்கள் ஒன்று சேர்ந்து பண்ணை திட்டத்தில் கீரை, காய்கறிகள், மரக்கன்றுகள், பூ வகைகள் வளர்த்து பொதுமக்களின் தேவைக்கேற்ப விற்பனை செய்து வருகிறோம்.
ஆண்டு முழுவதும் – வேலை வாய்ப்பு
இதன் மூலம் பெறக்கூடிய வருமானத்தை வங்கியில் கணக்கு துவங்கி சேமித்து மகளிர் குழுவின் வளர்ச்சிக்கு பயன்படுத்தி வருகிறோம். இவ்வாறு பணிகளை திட்டமிட்டு மேற்கொள்வதன் மூலம் ஆண்டு முழுவதும் வேலை வாய்ப்பு கிடைக்கின்றன. பொருளாதாரமும் குடும்பத்தை வழிநடத்த பயனுள்ளதாக இருக்கும் என மகிழ்ச்சியோடு தெரிவித்தார்கள்.
நிலையான – வருமானம்
அதனைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவிக்கையில், மகளிர் குழுவினர் ஒவ்வொரு ஊராட்சிகளும் தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் பணிகள் இருக்கும் பொழுது பார்த்துவிட்டு பணிகள் இல்லாத இடைப்பட்ட காலங்களில் இது போல் சுய தொழில்கள் துவங்கிட வேண்டும். காரணம் நிலையான வருமானம் என்பதை நம்மால் உருவாக்க முடியும். இன்றைய காலகட்டத்தில் மக்களின் தேவைகள் அதிகரிக்கும் வண்ணம் இருந்து வருகின்றன. அதை இருந்த இடத்திலிருந்து வழங்கும் வகையில் திட்டமிட்டு செயல்படலாம்.
கலை வண்ணப் – பொருட்கள்
தாதனேந்தல் இணைந்த கைகள் மகளிர் குழுவை போல் ஒவ்வொரு குழுவும் அந்தந்த பகுதியில் சூழ்நிலைக்கு ஏற்ப உற்பத்தி பொருள்களை தயாரித்து விற்பனை செய்யலாம். அதுமட்டுமின்றி இராமநாதபுரம் மாவட்டம் சுற்றுலா தலமாக இருந்து வருகிறது. கலை வண்ணப் பொருட்கள் தயாரிப்பதிலும் ஆர்வம் காட்டி பயன்பெற்றிடலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் ஜானி டாம் வர்கீஸ் தெரிவித்தார்.
தொடர்ந்து மகளிர் குழுக்கள் விற்பனை செய்த கீரை வகைகளை பொதுமக்களுக்கு விற்பனை செய்து மகளிர் குழுவினரை மாவட்ட ஆட்சித்தலைவர் ஜானி டாம் வர்கீஸ் பாராட்டினார்.