பரமக்குடியில் சௌராஷ்டிரா மகளிர் மாநாடு
பரமக்குடி நகர், எமனேஸ்வரத்தில் சௌராஷ்ட்ரா சமூக நலச் சங்கம் சார்பில் சௌராஷ்டிரா மகளிர் மாநாடு நடைபெற்றது.
மகளிர் மாநாடு
இம்மாநாட்டிற்கு சமூக நலச் சங்க தலைவர் மாருதி ராமன் தலைமை வகித்தார். எமனேஸ்வரம் சௌராஷ்டிரா சபை தலைவர் சேசைய்யன், பரமக்குடி சபை தலைவர் மாதவன், சமூக நலச் சங்க முன்னாள் தலைவர்கள் ராஜன், யோகையன், முன்னாள் பொதுச் செயலாளர் கோவிந்தன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். துணைத் தலைவர்கள் கோவிந்தன், கெங்காதரன் வரவேற்றனர்.பொதுச் செயலாளர் ரமேஷ்பாபு தீர்மானத்தை முன்மொழிந்தார். மதுரை சௌபாக்கியா தொழில் முனைவோர் கூட்டமைப்பு நிறுவன தலைவர் மகாலட்சுமி சிறப்புரையாற்றினார்.
5 தீர்மானங்கள்
இக்கூட்டத்தில், பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் உள்ள சௌராஷ்டிரா சமூகத்திற்கு மொழி வாரி சிறுபான்மையினர் என்ற அடிப்படையில் அரசு பணியில் 7% இட ஒதுக்கீடு வழங்கி அரசாணை பிறப்பிக்க வேண்டும்.
சௌராஷ்ட்ரா மக்களால் நடத்தப்படும் பள்ளிகளில் சௌராஷ்டிரா மொழியை வளர்த்திட விருப்ப பாடமாக நடத்த அனுமதிக்க வேண்டும். மழைக்காலங்களில் விவசாயிகள் மற்றும் மீனவர்களுக்கு நிவாரணம் வழங்குவது போல் நெசவாளர்களுக்கு வழங்கி அரசாணை வெளியிட ஆவணம் செய்ய வேண்டும்.
50 வயது பூர்த்தியான மகளிர் நெசவாளர்களின் உடல் நலனை கருத்தில் கொண்டு மாத உதவி தொகையாக ரூபாய் 2000 வழங்க வேண்டும், என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
சங்க பொருளாளர் ரமேஷ் பாபு நன்றி கூறினார்.