ராமநாதபுரம் மாவட்டத்திலிருந்து சிங்கப்பூருக்கு கடல் உணவு ஏற்றுமதி ஆலோசனை கூட்டம்
ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சிங்கப்பூருக்கு கடல் உணவு பொருட்கள் ஏற்றுமதி செய்வது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
தமிழ்நாடு மீன்வளர்ச்சிக்கழகமும், சிங்கப்பூர் அரசு தொழில் வளர்ச்சித் துறையும், இணைந்து நடத்திய இந்த கூட்டத்துக்கு ராமநாதபுரம் மாவட்ட கூடுதல் ஆட்சியர் வளர்ச்சி துறை பிரவீன்குமார் தலைமை வகித்தார். சிங்கப்பூர் அரசு தொழில் வளர்ச்சித் துறை அலுவலர்கள் சுரேஷ். பமீளா, ஆர்த்தி, ராமநாதபுரம் மாவட்ட மீன்வளத்துறை துணை இயக்குநர் காத்தவராயன் மற்றும் மீன் ஏற்றுமதியாளர்கள், இறால் உற்பத்தியாளர்கள், மீனவர் சங்கப் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.
சிங்கப்பூர் அரசு தொழில் வளர்ச்சித் துறை அலுவலர்கள் கூறியதாவது:
சிங்கப்பூர் நாட்டில் கடல் உணவு பொருட்களுக்கு மக்களிடையே வரவேற்பு உள்ளது. அதனால் மீன்கள், இறால் உள்ளிட்ட கடல்உணவுகளை ராமநாதபுரம் மாவட்ட மீனவர்கள், சிங்கப்பூருக்கு ஏற்றுமதி செய்யலாம். இது தொடர்பாக மீனவர்களுக்குத் தொழில் பயிற்சியை அளிக்கவும், சந்தைப்படுத்துவதற்கான வழி காட்டுதலை வழங்கவும் தமிழ்நாடு மீன் வளர்ச்சிக்கழகத்துடன் இணைந்து செயல்பட தயாராக உள்ளோம்.
சிங்கப்பூரிலிருந்து நார்வே. ஜப்பான் உள்ளிட்ட நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய சிங்கப்பூர் அரசு உதவியாக இருக்கும். தற்போது சிங்கப்பூர் அரசு தொழில் வளர்ச்சித்துறையின் மூலம் இந்தியாவில் 3 இடங்களில் அலுவலகங்கள் அமைத்து தொழில் புரிவோருக்கு தேவையான வழிகாட்டுதல் வழங்கப்படுகிறது என்று கூறினர்.