தீபாவளி பண்டிகைக்கு இராமேஸ்வரத்திற்கு சிறப்பு ரயில்கள் இயக்க தெற்கு ரயில்வே – நவாஸ்கனி எம்.பி கோரிக்கை.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியூர் மற்றும் வெளிநாடுகளில் பணிபுரியும் இராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த மக்கள் சொந்த ஊருக்கு வந்து செல்லும் வகையில் ராமேஸ்வரம் வரையிலான சிறப்பு ரயில்கள் இயக்க தெற்கு ரயில்வே பொது மேலாளரிடம் ராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் கே.நவாஸ்கனி எம்.பி கோரிக்கை விடுத்துள்ளார்.
கோரிக்கையில் கூறியிருப்பதாவது, ” என்னுடைய இராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட மக்கள் பலரும் வெளி மாநிலங்களிலும் வெளியூர்களிலும் பணிபுரிபவர்களாக உள்ளனர்.
அவர்கள் தீபாவளி பண்டிகைக்கு சொந்த ஊர்களுக்கு வந்து செல்ல ஏதுவாக சிறப்பு ரயில்கள் இயக்க தெற்கு ரயில்வே உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மக்கள் எளிதில் சொந்த ஊருக்கு வந்து செல்லும் வகையிலும் கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையிலும் கீழ்க்கண்ட ரயில்களை சிறப்பு ரயிலாக இயக்குவதற்கு ரயில்வே நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சென்னையிலிருந்து – இராமேஸ்வரம்,
கோவை – பழனி – திண்டுக்கல் வழியாக இராமேஸ்வரம்,
பெங்களூர் – கோவை – நாமக்கல் – கருர் – திண்டுக்கல் வழியாக இராமேஸ்வரம்.
கன்னியாகுமரி – இராமேஸ்வரம்.
பாலக்காடு – இராமேஸ்வரம்.
சேலம் – ஈரோடு – திருப்பூர் – கோவை பழனி – திண்டுக்கல் – மதுரை வழியாக இராமேஸ்வரம்.
ஹைதராபாத் – இராமேஸ்வரம்.
உள்ளிட்ட வழித்தடங்களில் இரு மார்க்கமும் சிறப்பு ரயில்கள் இயக்க உரிய நடவடிக்கை எடுக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு இராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினரும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் மாநில துணைத் தலைவருமான கே.நவாஸ்கனி எம்.பி கோரிக்கை விடுத்துள்ளார்.