இலங்கை கடற்படை – தமிழக தலைவர்கள் கண்டனம்
தமிழக மீனவர்கள் 15 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளதற்கு பாமக நிறுவனர் ராமதாஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் ஆகியோர் கண்டனம் தெரிவித்தனர்.
அவர்கள் தனித்தனியாக வெளியிட்ட அறிக்கை:
வங்கக்கடலில் கச்சத்தீவு அருகே இந்திய கடல் எல்லையில் மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமேசுவரம் மீனவர்கள் 15 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. அவர்களின் இரு படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டிருக்கின்றன. இலங்கைப் படையினரின் இந்த அத்துமீறல் கண்டிக்கத்தக்கது.
இலங்கைப் படையினரால் கடந்த 27-ஆம் தேதி கைது செய்யப்பட்ட 7 மீனவர்கள் இன்னும் விடுவிக்கப்படவில்லை. 20-ஆம் தேதி கைது செய்யப்பட்டு இரு நாள்களுக்கு முன் விடுவிக்கப்பட்ட 3 மீனவர்கள் இன்னும் சொந்த ஊர் திரும்பவில்லை. அதற்குள்ளாக அடுத்த அத்துமீறல் நடந்திருக்கிறது.
தற்போது கைது செய்யப்பட்ட 15 மீன்வர்களையும், ஏற்கெனவே கைது செய்யப்பட்ட 7 பேரையும் உடனடியாக மீட்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழக மீனவர்களை இனி கைது செய்யவோ, தாக்கவோ கூடாது என்று இலங்கை அரசை மத்திய அரசு கடுமையாக எச்சரிக்க வேண்டும்.
கே.பாலகிருஷ்ணன் தெரிவித்த அறிக்கையில் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களையும், படகுகளையும் உடனடியாக மீட்பதற்கு மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்தப் பிரச்னையில் உடனடியாக தலையிட மத்திய அரசை, தமிழக அரசு வலியுறுத்த வேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்தார்.