இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் கைது
கச்சத்தீவு அருகே மீன் பிடித்த ராமேசுவரம் மீனவர்கள் 15 பேரை இலங்கை கடற்படையினர் சனிக்கிழமை நள்ளிரவில் 2 படகுகளுடன் சிறை பிடித்துச் சென்றனர்.
அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்ட மீனவர்கள்
ராமநாதபுரம்மாவட்டம் ராமேஸ்வரத்திலிருந்து சனிக்கிழமை 539 விசைப்படகுகளில் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச்சென்றனர். நள்ளிரவு கச்சத்தீவுக்கும், நெடுந்தீவுக்கும் இடையே மீன்பிடித்துக்கொண்டிருந்த போது இலங்கை கடற்படையினர் 2 படகுகளை சிறைப்பிடித்தனர்.
அதிலிருந்து லியோ,ஜான்சன், எஸ்.ரா.முருகன், நம்புமிலன், காளிமுத்து, வினோத், நம்புக்குமார், அந்தோணி ராயப்பன், அருணாச்சலம், பாண்டி, செந்தூர் பாண்டி, ரபிஸ்டன், மருது, ஆகிய 15 மீனவர்களையும் தலைமன்னார் கடற்படைக்கு அழைத்துச்சென்றனர்.
தொடர்ந்து, 15 மீனவர்களும் தலைமன்னார் நீரியல் துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர்.இதையடுத்து, ராமேசுவரம் மீன் பிடித்துறைமுகத்தில் அனைத்து விசைப்படகு மீனவர் சங்கம் சார்பில் அவசரக்கூட்டம் நடைபெற்றது.இந்தக் கூட்டத்துக்கு சங்கத்தின் மாவட்டத் தலைவர் ஜே.சுராஜா தலைமை வகித்தார்.
வேலைநிறுத்தம் அறிவிப்பு:
ராமேசுவரம் மீனவர்களை இலங்கை கடற்படையினர் தொடர்ந்து கைது செய்வதற்கு கண்டனம் தெரிவித்ததுடன், படகுகள், மீனவர்களை உடனே விடுவிக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி
திங்கள்கிழமை ஒரு நாள் அடையாள வேலைநிறுத்தம் மேற்கொள்வது, செவ்வாய்க்கிழமை தங்கச்சிமடம் பேருந்து நிறுத்தம் அருகே ஆர்ப்பாட்டம் நடத்துவது, அதன்பின் அடுத்த கட்டப்போராட்டம் மேற்கொள்வது என்பன உள்ளிட்டதீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில், மீனவர் சங்கத் தலைவர்கள் எமரிட், சகாயம், இருதயம் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.