தக்காளி ஜாம் தயாரிப்பு – தொழில்
தேவையான பொருட்கள்:
தக்காளி பழக்கூழ் – ஒரு கிலோ.
சர்க்கரை – 750 கிராம்.
சிட்ரிக் அமிலம் அல்லது எலுமிச்சை சாறு – அரை தேக்கரண்டி.
தக்காளி ஜாம் செய்முறை:
தக்காளியைச் சுத்தம் செய்து தோல், விதைகளை நீக்கி சதைப்பகுதிகளைச் சேகரித்துக் கொள்ள வேண்டும். இவற்றை மிக்ஸி மூலம் கூழாகும் வரை அரைத்து வடிகட்ட வேண்டும். கொஞ்சம் தண்ணீர் எடுத்து, அதில் சிட்ரிக் அமிலத்தைக் கரைத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
தக்காளிக் கூழை பாத்திரத்தில் இட்டு, சிறிது நேரம் வேகவிட்டு ஒரு கொதி வந்தவுடன் சர்க்கரையைச் சேர்த்து, அடுத்து சிட்ரிக் அமிலம் கலந்த தண்ணீரை ஊற்ற வேண்டும். நன்றாகக் கொதித்துக் கொண்டிருக்கும் கலவையை ஒரு ஸ்பூனில் சிறிதளவு எடுத்து ஒரு தட்டில் ஊற்றிப் பார்த்தால் கெட்டியாக விழ வேண்டும். அதுவரை கலவை வேக வேண்டும்.
அந்த பதம் வந்தபின் பாத்திரத்தை இறக்கி வைத்து கொஞ்சம் ஆறவிட்டு, வாய் அகன்ற கண்ணாடி பாட்டில்களில் சூடாகவே நிரப்பி வைக்க வேண்டும். இந்த நிலையிலேயே முழுவதும் ஆறவிட்டு, அதன்பிறகு பாட்டில்களை மூடி வைக்க வேண்டும். சூடானக் கலவையை பாட்டில்களில் நிரப்பும் போது பாட்டில்களை தரை மீது வைப்பதைத் தவிர்த்து, மரப்பலகை மீது வைத்துக் கொண்டால், சூட்டின் மூலம் பாட்டில்கள் உடைந்து போகாமல் தடுக்க முடியும்.