நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவிற்குப் பிறகு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்படும் பள்ளி, கல்லூரிகளுக்கு வாக்கு எண்ணிக்கை நடைபெறும் 22ஆம் தேதி வரை விடுமுறை அளிக்கப்படும் என தகவல் வெளியாகி உள்ளது.
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு வரும் பிப்ரவரி 19-ஆம் தேதி நடைபெறுகிறது. இந்த நாளில் தேர்வுகள் ஏதாவது நடைபெறுகிறதா; உள்ளூர் திருவிழாக்கள் நடைபெறுகிறதா என்பது குறித்து, அரசு தேர்வு துறை மற்றும் பிற துறை அதிகாரிகளுடன் மாநில தேர்தல் ஆணையர் நேற்று ஆலோசனை நடத்தியது.
அப்போது பிப்ரவரி 20ஆம் தேதி தமிழகத்தில் பல்வேறு மையங்களில் யுபிஎஸ்சி தேர்வுகள் நடைபெற இருப்பதை, அரசு தேர்வுகள் துறை அதிகாரிகள் சுட்டிக்காட்டி தேர்வு மையங்கள் விவரங்களையும் ஆணையத்திடம் வழங்கினர்.
எனவே, தேர்வு நடைபெறும் மையங்களில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்படாது என்ற தகவல் வெளியாகியிருக்கின்றன. அதே போல் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்படும் பள்ளி, கல்லூரிகளுக்கு வாக்கு பதிவு நாள் மற்றும் வாக்கு எண்ணிக்கை நடைபெறக்கூடிய பிப்ரவரி 22ஆம் தேதி வரை விடுமுறை அளிக்கப்படும் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.