வன்னியர்களுக்கான 10.5 சதவீத இட ஒதுக்கீடு செல்லாது என்று உச்ச நீதிமன்ற உத்தரவை வரவேற்று பரமக்குடியில் வெடி வெடித்து, இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது.
மனு தாக்கல்
தமிழகத்தில் கடந்த அதிமுக ஆட்சியில் வன்னியர்களுக்கான 10.5 சதவீத இட ஒதுக்கீடு அளித்து அரசாணை பிறப்பித்தது.
இந்த அரசாணையை ரத்து செய்யக்கோரி ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே கமுதக்குடியை சேர்ந்த பாலமுரளி மற்றும் பலர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர்.
அமல்படுத்தக் கோரி
வன்னியர்களுக்கான 10.5 சதவீத இட ஒதுக்கீடு செல்லாது என நவம்பர் 13 ஆம் தேதி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த உத்தரவை ரத்து செய்யக்கோரி தமிழக அரசு மற்றும் பா.ம.க சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டது.
அதே சமயத்தில் வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு செல்லாது என்ற சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை உடனடியாக அமல்படுத்தக் கோரி பாலமுரளி தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.
தீர்ப்பு – வெடி வெடித்து, இனிப்பு
வன்னியர்களுக்கான 10.5 சதவீத இட ஒதுக்கீடு செல்லாது எனவும், மேல்முறையீடு மனுவை தள்ளுபடி செய்தும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த உத்தரவை வரவேற்கும் விதமாக மனுதாரர் பாலமுரளி, மறத்தமிழர் சேனை மாநில அமைப்பாளர் பிரபாகரன், முக்குலத்தோர் புலிப்படை மாநில அமைப்புச் செயலாளர் சுனாமிசேதுபதி, பார்வர்ட் பிளாக் யோகநாதன், ராமநாதபுரம் மாவட்ட பார்வர்ட் பிளாக் செயலாளர் தீபக் ஆகியோர் பரமக்குடி பேருந்து நிலையம் முன்பாக வெடி வெடித்து, பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.
இதையும் படியுங்கள் || முதலமைச்சர் ரங்கசாமி இடைக்கால பட்ஜெட் தாக்கல்